நாடாளுமன்றத்திற்கு வெளியில் வந்து கதையுங்கள்! சரத் வீரசேகரவின் கருத்திற்கு சட்டத்தரணிகள் காட்டம் (Photos)
நாடாளுமன்றுக்குள் இருந்து கொண்டு கதைக்காமல் தைரியமிருந்தால் வெளியில் வந்து கதைக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவுக்கு வவுனியா சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு நீதிபதி தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்த கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவித்து வவுனியா சட்டத்தரணிகள் சங்கத்தினால் இன்று (25.08.2023) ஒருமணி நேர பணிப்புறக்கணிப்பும் ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் கருத்து தெரிவிக்கும் போதே சட்டத்தரணிகள் சங்கம் இந்த விடயத்தை கூறியுள்ளது.
சட்டத்தரணிகள் சங்கம் சார்பில் கடிதம்
மேலும் தெரிவிக்கையில், நிலுவையில் உள்ள குருந்தூர் மலை தொடர்பான வழக்கினை விசாரித்து வரும் நீதிபதியை பாதிக்கும் வகையிலான கருத்தினை சரத் வீரசேகர தெரிவித்திருந்தார்.
இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். அத்துடன் அவர் நாடாளுமன்ற வரப்பிரசாதத்தை பயன்படுத்தியே இவ்வாறு கதைக்கிறார். முடிந்தால் அவர் வெளியில் வந்து இவ்வாறு கதைக்க வேண்டும்.
அவரது உரை தொடர்பான கடிதத்தை இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தலைவருக்கு முகவுரையிடப்பட்டு, ஜனாதிபதி மற்றும் நீதி அமைச்சர், நீதிச்சேவைகள் ஆணைக்குழு ஆகியவற்றிற்கு அதன் பிரதிகளை அனுப்ப இருக்கின்றோம்.
இந்த கடிதமானது வடக்கு, கிழக்கில் அமைந்துள்ள அனைத்து சட்டத்தரணிகள் சங்கம் சார்பிலும் அனுப்பப்படவுள்ளது என தெரிவித்துள்ளார்.









