அமைச்சர் சரத் வீரசேகர விசரனைப் போன்று பிதற்றுகின்றார்! - சரத் பொன்சேகா சாடல்
பொதுப்பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர (Sarath Weerasekara) விசரனைப் போன்று பிதற்றுகின்றார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா (Sarath Fonseka) குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
நான் ஒர் நல்ல சிங்கள பௌத்தன், அண்மையில் பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் ஊடகங்களில் பயங்கரவாதம் பற்றி பேசினார். நான் அவரின் காலில் விழுந்து கேட்கின்றேன் இந்த நாட்டை அழிக்க வேண்டாம்,
தர்கா நகரில் இடம்பெற்றது போன்று நாட்டில் பீதியை ஏற்படுத்த வேண்டாம். பொதுப் பாதுகாப்பு அமைச்சர் விசரனைப் போன்று பிதற்றுகின்றார். உங்களுக்கு அதனை விட நல்ல ஒருவரை தெரிவு செய்ய முடியவில்லையா?
குறைந்தபட்சம் இந்தப் பதவியை தயாசிறி ஜயசேகரவிற்கேனும் வழங்குங்கள். பொதுப் பாதுகாப்பு அமைச்சரும் ஞானசார தேரரை பின்பற்றி செல்கின்றார். குரங்கு கையில் பூமாலை கிடைத்தது போன்றுதான் இந்த அமைச்சுப் பதவி.
லொஹான் ரத்வத்தே துப்பாக்கியை எடுத்துக் கொண்டு சிறைச்சாலைக்கு செல்கின்றார். அமைச்சர், பியூமி ஹன்சமாலியுடன் செல்கின்றார், லொஹான் புஸ்பிகா டி சில்வாவுடன் செல்கின்றார்.
இது சரியில்லை, இது நாட்டின் பெயருக்கு களங்கத்தை உருவாக்கும்.
பண்டோரா பேப்பர்ஸ் மூலம் யார் திருடுகின்றார்கள் என்பது தெரியவந்துள்ளது எனவும், மருந்துப் பொருட்களின் விலைகளை உயர்த்த வேண்டாம் எனவும் சரத் பொன்சேகா நாடாளுமன்றில் கூறியுள்ளார்.