விடுதலைப் புலிகளின் மீள் எழுச்சி..! எச்சரிக்கும் சரத் பொன்சேகா
ஆட்சியாளர்கள் உறங்கிக்கொண்டிருந்தால் விடுதலைப் புலிகள் அமைப்பு மீள் எழுச்சி பெறக்கூடிய அச்சுறுத்தல் உள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பு தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கனடாவில் தமிழின அழிப்பு நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது. சர்வதேச அழுத்தங்கள் தொடர்கின்றன.
பிரச்சினைகள் எழுவதற்குரிய சாத்தியம்
எனவே, விடுதலைப் புலிகள் அமைப்பு வடக்கு, கிழக்கில் மீள தலைதூக்குவதற்குரிய சாத்தியம் உள்ளதா நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,
“வடக்கிலுள்ள சில அரசியல்வாதிகள் வாக்கு வேட்டைக்காகத் தனி இராச்சியம் அமைக்கப்படும் என்ற உறுதிமொழியை இன்றளவிலும் வழங்கி வருகின்றனர். சுயநிர்ணய உரிமை பற்றி கதைக்கின்றனர்.
அப்படியான விஷக்கிருமிகள் இருக்கும் நிலையில், நாட்டில் பலவீனமான தலைவர் உருவாகி, நாடு பலவீனமாகி, வீழ்ச்சியடைந்தால் நிச்சயம் அப்படியான பிரச்சினைகள் எழுவதற்குரிய சாத்தியம் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
படைக் குறைப்பு
படைக் குறைப்பு தொடர்பில் மேற்படி ஊடகம் எழுப்பிய கேள்வியொன்றுக்கு,
“எமது நாட்டு தேசிய பாதுகாப்பு என்பது ஐ.எம்.எப்பின் பொறுப்பு அல்ல. அது அரசின் பொறுப்பு. எனவே, தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
படைக் குறைப்பு யோசனையுடன் உடன்பட முடியாது” என்று பொன்சேகா திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
தமிழின அழிப்பு நினைவகம்
கனடாவில் அமைக்கப்பட்டுள்ள தமிழின அழிப்பு நினைவகம் பற்றியும் சரத் பொன்சேகாவிடம் வினவப்பட்ட போது,
“சில தமிழ் டயஸ்போராக்கள் விசாவுக்காகவும், தமது வியாபாரத்தை விஸ்தரித்துக்கொள்வதற்காகவும் இலங்கையில் கொடுமைகள், சித்திரவதைகள் நடப்பதாகக் கூறி வருகின்றனர்.
தாம் இலங்கைக்குச் சென்றால் இன்னல்களைச் சந்திக்க நேரிடும் எனக் கூறி அதற்காகப் பல வேலைத்திட்டங்களை அவர்கள் முன்னெடுக்கின்றனர்.
இலங்கையில் இனப்படுகொலை நடந்துள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களைத் தற்போதைய அரசு போலவே கடந்தகால அரசுகளும் நிராகரித்துள்ளன” என அவர் பதிலளித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |