பொலிஸாரை அச்சுறுத்தும் சரத் பொன்சேகா - நிமல் பியதிஸ்ஸ குற்றச்சாட்டு
பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா பொலிஸாரை அச்சுறுத்தும் வகையில் செயற்படுவதாக பொதுஜன பெரமுன எம்.பி. நிமல் பியதிஸ்ஸ குற்றம் சாட்டியுள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவை நோக்கி மேற்கண்டவாறு குற்றம்சாட்டியுள்ளார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர், தற்போதைக்கு சரத் பொன்சேகா அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் புதிய ஒருங்கிணைப்பாளர் போன்று செயற்படுகின்றார்.
பொலிஸாருடன் கொடுக்கல்,வாங்கல்
பலவந்தமான முறையில் ஆட்சியைக் கைப்பற்றப்போவதாகவும், அதன் பின்னர் பொலிஸாருடன் கொடுக்கல்,வாங்கல்களைத் தீர்த்துக்கொள்ளவுள்ளதாகவும் அவர் பொலிஸாரை அச்சுறுத்தி செயற்பட விடாமல் தடுத்துக்கொண்டிருப்பதாக எங்களுக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன.
தற்போதுள்ள நிலையில் அதிகாலை மூன்று மணியளவில் யாருடைய வீட்டுக்குள்ளேனும் திருடர்கள் புகுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்று சரத் பொன்சேகாவுக்குத் தான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்க வேண்டும் போலுள்ளது.
இலங்கையில் எந்தவொரு அரசியல்வாதியும் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவிப்பதை அனுமதிக்க முடியாது. பொலிஸாரைப் பாதுகாக்க அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்து செயற்பட வேண்டும் என்றும் நிமல் பியதிஸ்ஸ எம்.பி. தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.