படைவீரர்களாக இருந்தாலும் கொலை செய்ய அனுமதிக்க முடியாது! – சரத் பொன்சேகா
படைவீரர்களாக இருந்தாலும் படுகொலைகளை செய்வதற்கு அனுமதிக்கப்பட முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
போர் செய்தோம் என்ற காரணத்திற்காக எவருக்கும் படுகொலை செய்ய அனுமதிக்க முடியாது எனவும், சில வேளையில் நாளை நீங்களும் அதற்கு இரையாகக் கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
படைவீரர்கள் தங்களது சீருடையை விற்று, படைவீரர் என்ற போர்வையில் கொலை செய்வதற்கு அனுமதிக்க முடியாது.
சுனில் ரட்நாயக்க என்ற படைவீரர் செய்த கொலைகளை பொதுகாப்பு அமைச்சர் நியாயப்படுத்துவது மிகவும் கோழைத்தனமான செயற்பாடு.
மனம்பேரி, சிரிசாந்தி குமாரசாமி கொலையுடன் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட்டனர். எம்பிலிட்டி கொலைகளுக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அவ்வாறான தண்டனைகள் நிச்சயமாக விதிக்கப்பட வேண்டியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தற்போதைய பொதுப்பாதுகாப்பு அமைச்சர் போர் செய்ததாக நாடாளுமன்றில் கூறுகின்றார், அவரை கடற்படையில் வெளியே போட்ட போது என்னிடம் ஓடி வந்து தொழில் கேட்டார்.
பின்னர் நான் தான் கோட்டாபய ராஜபக்சவிற்கு பரிந்துரை செய்து சிவில் பாதுகாப்புப் படையின் பொறுப்பதிகாரியாக நியமித்தேன், வாகன சாரதிகள் வழங்கப்படவில்லை பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்னிடம் வந்து கெஞ்சி அழுத போது நான் இராணுவ வாகன சாரதிகளையும், பாதுகாப்பையும் வழங்கினேன்.
அவற்றை நன்றி மறந்து பேசுகின்றார். தமிழ் மக்கள் இராணுவத்தினர் மீது கோபம் இல்லாத காரணத்தினால் எனக்கு ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்தனர்.
நான் டொலர் பெறவில்லை, ஆனால் சரத் வீரசேகர ஜெனீவா சென்று டொலர்கள் பெற்றுக்கொண்டார் என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இந்த நாட்களில் ஜனநாயக விரோத செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன, அடக்குமுறைகளை ஏற்றுக் கொள்ளக் கூடாது. எந்தக் கட்சியை பிரதிநிதித்துவம் செய்தாலும் அடக்குமுறையை ஏற்க முடியாது.
வீதியில் சென்ற ஒருவர் வாகன ஒலியை எழுப்பினார் என அவரை ஏதோ பெரிய கொள்ளையரை பிடிப்பது போன்று பிடித்து பொதுப்பாதுகாப்பு அமைச்சு செயற்பட்டது. இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என குறிப்பிட்டுள்ளார்.