சாணக்கியனுக்கும், ஹர்சவிற்கும் நாடாளுமன்றில் கடுமையான வாதவிவாதம்! இடையில் இணைந்த சுமந்திரன்
நாடாளுமன்றில் இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் உரையினை தொடர்ந்து கடுமையான வாதவிவாதங்கள் பதிவாகியிருந்தன.
சீனாவிற்கு எதிராக சாணக்கியனின் கருத்து
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கருத்து தெரிவிக்கையில், சீனா வீட்டுக்கு போ என்ற கோசத்திற்கு தலைமை ஏற்கப் போகிறேன் என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு சீனா உதவவில்லை. அதற்கு பதிலாக சீனா, தொடர்ந்தும் இலங்கையை கடன் பொறிக்குள் வைத்திருக்கவே முயற்சிக்கிறது.
நான் அண்மையில் இது தொடர்பில் நாடாளுமன்றில் தெரிவித்த கருத்துக்கு, கொழும்பில் உள்ள சீனத்தூதரக பேச்சாளர், டுவிட்டரில் பதில் வழங்கியுள்ளார். இது, இலங்கை மக்களின் இறைமைக்கு எதிரான செயலாகும்.
எனவே சீனாவின் இந்த செயற்பாடு நிறுத்தப்பட வேண்டும். இதனை விடுத்து 22 மில்லியன் இலங்கை மக்களுக்கு நன்மை செய்யவேண்டுமானால், இலங்கைக்கு வழங்கியுள்ள கடனை ரத்துச் செய்ய வேண்டும்.
அல்லது சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவியைப் பெற்றுக்கொள்வதற்காக மறுசீரமைப்புக்கு உதவ வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
ஹர்ச டி சில்வா எதிர்ப்பு
இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா, சாணக்கியனுக்கு தமது கருத்தை வெளியிட உரிமையுள்ளது. இருப்பினும் சர்வதேச நாடுகளுடன் இணைந்து செல்ல வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை சீனா வீட்டுக்கு போ என்ற கோசம் தொடர்பிலும் ஹர்ச தமது கருத்தை வெளியிட்டதையடுத்து அவரின் கருத்தை ஆட்சேபித்து சாணக்கியன் குரல் எழுப்பிய போதும், சாணக்கியனுக்கு சபைக்கு தலைமை தாங்கிய உறுப்பினர் அனுமதி வழங்கவில்லை.
இதனை தொடர்ந்து தமது கட்சியின் உறுப்பினரின் கருத்துக்கு எதிர்க்கட்சியின் உறுப்பினரான ஹர்ச டி சில்வா, விமர்சனம் வெளியிட முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் விவாதித்த நிலையில் இரு தரப்பிற்கும் இடையில் கடுமையான வாக்குவாதங்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.