மஹிந்த நாட்டில் இனவாதத்தை தோற்றுவித்திருப்பார் - சபையில் பகிரங்க குற்றச்சாட்டு
ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கமாக இருந்து புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக தெரிவித்திருந்தால், இலங்கையின் தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) நாட்டில் இனவாதத்தை தோற்றுவித்திருப்பார் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் (Shanakiyan Rajaputhiran Rasamanickam) குற்றம்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
அடிப்படைவாத தாக்குதல்தாரிகளுக்கு சூத்திரதாரி அல்லாஹ் என ஞானசார தேரர் (Galagoda Aththe Gnanasara) சொல்கிறார். அவரின் கருத்தை கண்டிக்கிறேன்.
இந்த கருத்து தொடர்பில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மௌனம் காப்பதேன்? எந்த நேரத்திலும் இலங்கையில் தாக்குதல் நடக்கலாமென ஞானசார தேரர் கூறுகிறார்.
அப்படியானால் முதலீட்டாளர்கள் எப்படி நாட்டுக்கு வருவார்கள்? ஜனாதிபதியின் உத்தியோகபூர்வமற்ற ஊடகப் பேச்சாளராக ஞானசார தேரர் செயற்படுகின்றார்.
இஸ்லாமிய தலைவர்களை கைது செய்யுமாறும், ஜனாதிபதியை பதவிக்கு கொண்டு வருவதற்காக சுமார் 800 முறை மத வழிபாடுகளில் ஈடுபட்டதாகவும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார் என சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார்.
இந்த சந்தர்ப்பத்தில் ஐக்கிய மக்கள் சக்திக்கு நன்றி தெரிவிக்கின்றேன். இன்று மஹிந்த ராஜபக்ச எதிர்க்கட்சியில் இருந்திருந்து, ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கமாக இருந்து புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக தெரிவித்திருந்தால், மஹிந்த ராஜபக்ச நாட்டில் இனவாதத்தை தோற்றுவித்திருப்பார் என சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் கத்தி கூச்சலிட்டு ஜி.எஸ்.பியை தக்க வைத்துக் கொள்ள முடியாது. பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்காத வரை ஜி.எஸ்.பியை தக்க வைத்துக் கொள்ள முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.