அரசாங்கம் மக்களை மரணத்திற்குள் தள்ளியுள்ளது - சமன் ரத்னபிரிய
நல்லாட்சி அரசாங்கம் அறிந்து கொண்டே ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் நடைபெற இடமளித்ததாக குற்றம் சுமத்தும் தற்போதைய அரசாங்கம் அறிந்து கொண்டே நாட்டுக்குள் கோவிட்டை கொண்டு வந்து மக்களை மரணத்திற்குள் தள்ளியுள்ளதாக தேசிய தொழிற்சங்க முன்னணியின் தலைவரும், அரச தாதி அதிகாரிகள் சங்கத்தின் தலைவருமான சமன் ரத்னபிரிய குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பு - புஞ்சிபொரள்ளையில் உள்ள அரச தாதி அதிகாரிகள் சங்கத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
கோவிட் தொற்றை கட்டுப்படுத்த உலக சுகாதார அமைப்பு வழங்கிய பரிந்துரைகளை கொஞ்சம் கூட மதிக்காத அரசாங்கம், தினமும் 48 மரணங்கள் ஏற்படும் இடத்திற்கு நாட்டை தள்ளி, குற்றத்தை செய்துள்ளது.
தினமும் சுமார் 40 கோவிட் மரணங்கள் ஏற்பட்டு வருகின்றன. வீடுகளிலும் மரணங்கள் ஏற்படுகின்றன.
இந்த நிலைமையை முகாமைத்துவம் செய்ய அரசாங்கம் எடுக்கும் முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை என்பது தொடர்ந்தும் உறுதியாகி வருகின்றது.
அரச வைத்தியசாலைகளில் நோயாளிகளின் கொள்வளவை தாண்டி நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது எனவும் சமன் ரத்னபிரிய குறிப்பிட்டுள்ளார்.