வைத்தியசாலையில் இருந்து மீட்கப்பட்ட கைக்குண்டு! தமிழ் இளைஞன் கைது - இலக்கு வைக்கப்பட்டாரா சமல்?
கொழும்பு - நாராஹேன்பிட்டி தனியார் வைத்தியசாலையில் நேற்றையதினம் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை - உப்புவெளி பகுதியைச் சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு்ள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த தனியார் வைத்தியசாலையில் கோவிட் தொற்றுக்குள்ளாகியுள்ள நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ஸ, விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரணவும் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், இவர்களில் எவரையாவது இலக்கு வைத்து குறித்த கைக்குண்டு கொண்டுவரப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணைகள் நடத்தப்படுவருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வைத்தியசாலையில் பொருத்தப்பட்டுள்ள CCTV கமரா காணொளியின் ஊடாக நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் கைக்குண்டை கொண்டு வந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தமிழ் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் இளைஞன், வைத்தியசாலைக்கு அருகாமையில் நிர்மாணிக்கப்படும் கட்டட நிர்மாணப் பணிகளில் கடமையாற்றி வந்துள்ளமை தெரிய வந்துள்ளது.
குறித்த இளைஞன் மேலதிக விசாரணைகளுக்காக குற்றத் தடுப்பு பிரிவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைக்குண்டின் பாதுகாப்பு ஆணியை கழற்றி, நுளம்பு சுருளொன்றை இணைத்து, வெடிக்கும் வகையில் இந்த கைக்குண்டு தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்..