உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் முக்கிய நகர்வு - சஜித் உள்ளிட்ட 10 எம்.பி.க்களுக்கு அழைப்பு விடுத்துள்ள சிஐடி
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுடன் முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கு தொடர்பு இருப்பதாக நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட 10 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பெற சட்டமா அதிபர் திணைக்களம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்துகள் நாடாளுமன்ற சிறப்புரிமையின் கீழ் பாதுகாக்கப்படுவதால், அவர்களிடம் வாக்குமூலம் பெறுவது அவர்களின் தன்னார்வ சம்மதம் மற்றும் முழுமையான ஒத்துழைப்பின் அடிப்படையிலேயே இடம்பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
சுரேஷ் சலே உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக அவர்களிடம் நம்பகமான தகவல்கள் அல்லது ஆதாரங்கள் இருக்கலாம் என்ற அடிப்படையில், அந்தத் தகவல்கள் என்ன என்பதை ஆராய குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் வழங்கிய ஆலோசனையின் அடிப்படையில், நாடாளுமன்ற ஹன்சார்ட் அறிக்கைகளில் பதிவாகியுள்ள குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துகளின் பிரதிகள் பெறப்பட்டு ஆய்வு செய்யப்பட உள்ளன.

அதன் பின்னர், சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைக்கு உதவும் வகையில் இந்தத் தகவல்கள் பெறப்படுவதாகவும், இது முழுமையாக தன்னார்வ அடிப்படையிலான செயல்முறை என்றும் விசாரணை அதிகாரிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கவுள்ளனர்.
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள 24 சந்தேகநபர்களுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டெம்பர் 22ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.
வழக்கு விசாரணை
கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை இடம்பெற்றுள்ளது.
நீதிபதிகள் நவரத்ன மாரசிங்க, சுஜீவ நிஷங்க மற்றும் ராமநாதன் கண்ணன் ஆகியோர் இந்தக் குழாமில் இடம்பெற்றுள்ளனர். வழக்கில் இருதரப்பினரும் தங்களது இறுதி எழுத்துமூல சமர்ப்பிப்புகளை கொழும்பு அலுத்கடே எம்.எம்.சி. கட்டிடத்தில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் சமர்ப்பித்து நிறைவு செய்துள்ளனர்.

இதற்கிடையில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சுரேஷ் சலே, கடந்த 100 நாட்களுக்கு அண்மித்த காலமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவது அவசியமா என்பதை உறுதிப்படுத்தும் மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் கோரியிருந்தார்.
எனினும், அவ்வாறான அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறியதாகக் கூறப்படும் நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் எதிர்வரும் செப்டெம்பர் 22ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டுள்ளார்.