சர்வ கட்சி மாநாட்டை கூட்டுமாறு சஜித் கோரிக்கை
சர்வ கட்சி மாநாடு ஒன்றைக் கூட்டுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார வீழ்ச்சி மற்றும் இலங்கை ரூபாயின் மிகவேகமான பெறுமதி வீழ்ச்சி ஆகிய விவகாரங்கள் குறித்து அவசரமாக விவாதிப்பதற்காக இந்த மாநாடு கூட்டப்பட வேண்டுமென கோரியுள்ளார்.
நாடு மீண்டும் ஒருமுறை கடுமையான மற்றும் ஆபத்தான பொருளாதார எச்சரிக்கை நிலையை எதிர்கொண்டுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் அனைத்தும் தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையுடன் ஒன்றிணைந்துள்ளதாக பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது 'X' (முன்னர் ட்விட்டர்) சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
ரூபாயின் மிகவேகமான பெறுமதி வீழ்ச்சி, நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு சுமை மற்றும் தீவிரமடைந்து வரும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றை ஒரு கட்சி சார்ந்த அல்லது அரசியல் ரீதியான பிரச்சினையாக பார்க்க முடியாது என தெரிவித்துள்ளார்.
நிலைமை மேலும் மோசமடைவதற்கு முன்பாக, இந்த நெருக்கடிகளுக்கு அவசர தேசிய தீர்வுகளைக் காண்பதற்கு ஏதுவாக, உடனடியாக சர்வ கட்சி மாநாட்டை கூட்டுமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் எதிர்க்கட்சிகள் முறைப்படி கோரிக்கை விடுக்க தீர்மானித்துள்ளதாகவும் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.