ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைக்கவே 13 தொடர்பில் பேசுகிறார்கள் - சஜித் அணி குற்றச்சாட்டு
தற்போதைய ஆட்சியின் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஒருபோதும் பிரதமர் பதவியை ஏற்கமாட்டார் எனவும், ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைக்கவே 13ஆம் திருத்தம் தொடர்பில் பேச்சப்படுகிறது எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளனர் எனவும், சஜித் பிரேமதாஸவுக்குப் பிரதமர் பதவி வழங்கப்படவுள்ளது எனவும் வெளியாகும் தகவல்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
எமது கட்சி மேலும் பலமடையும்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"இந்த ஆட்சியின் கீழ் இவ்வாறு எதுவும் நடக்காது. சஜித்தைக் கைவிட்டுச் செல்வதற்கு நாம் தயாரில்லை.
மேலும், அரசால் முன்னெடுக்கப்பட்டு வரும் சில நல்ல திட்டங்களை நாங்கள் வரவேற்கின்றோம். அதற்காக அரசுக்கு ஆதரவு என அர்த்தப்படாது.
எதிரணி பலமாகவுள்ளது. எதிர்காலத்தில் எமது கட்சி மேலும் பலமடையும். ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைப்பதற்கான முயற்சியில் மாத்திரமே தற்போதைய அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. " என தெரிவித்துள்ளார்.



