தேசிய நிதிப் பாதுகாப்பு ஆபத்தில்! 25 இலட்சம் டொலர் மோசடி குறித்து சஜித் காட்டம்
இலங்கையின் வெளிநாட்டுத் தவணைக் கட்டணமான 25 இலட்சம் அமெரிக்க டொலர் சைபர் திருட்டுக்கு உள்ளாகியுள்ளமை நாட்டின் தேசிய நிதிப் பாதுகாப்புக்கு விடுக்கப்பட்ட பாரதூரமான அச்சுறுத்தல் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எச்சரித்துள்ளார்.
நேற்றைய தினம் (30.04.2026) கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
கடன் தவணை செலுத்தப்படாத நிலை
அவர் மேலும் தெரிவிக்கையில், 25 இலட்சம் அமெரிக்க டொலர் பெறுமதியான கடன் தவணையை நாடும் மக்களும் இழந்துள்ளனர். இதனால் உரிய தரப்புக்குச் செலுத்த வேண்டிய கடன் தவணை செலுத்தப்படாமலே காணப்படுகின்றது.
இந்த மோசடி காரணமாக சர்வதேச நிதி தரவரிசை மற்றும் ஏனைய பரிவர்த்தனைகளுக்குப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளனவா என்பது குறித்து அரசு நாட்டுக்கு விளக்கமளிக்க வேண்டும். கொடுப்பனவு செலுத்தப்படாமையால் ஏற்பட்ட இறையாண்மை கடன் தவறல் சர்வதேச மட்டத்தில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

நிதித் திருட்டுடன் சம்பந்தப்பட்ட சூத்திரதாரி
இந்த நிதித் திருட்டுடன் சம்பந்தப்பட்ட சூத்திரதாரிகளைக் கண்டறிய அரசு வெளிப்படையான மற்றும் பக்கசார்பற்ற விசாரணையை முன்னெடுக்க வேண்டும். இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாத வண்ணம், ஜனாதிபதி தலைமையிலான அரசு ஒரு தேசிய சைபர் பாதுகாப்புக் கட்டமைப்பை உடனடியாக ஸ்தாபிக்க வேண்டும்.
இந்த மோசடி தொடர்பாக விசாரித்து நாட்டின் நிதிப் பாதுகாப்பை உறுதி செய்ய, எதிர்க்கட்சி தலைமையில் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்று அமைக்கப்பட வேண்டும். இந்த நிதி நிர்வாகத் துறையில் ஏற்பட்டுள்ள சரிவு மற்றும் தவறுக்கு ஜனாதிபதி தலைமையிலான அரசே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்றார்.
காணாமல் போன டொலர்கள்: ஜனவரியிலேயே தோன்றிய அபாய அறிகுறிகள் - வரி செலுத்துவோர் தலையில் விழப்போகும் பேரிடி..!