மத்திய கிழக்கு போர் சூழலில் இலங்கை தொழிலாளர்கள் பாதுகாப்பு அவசியம்: சஜித் கோரிக்கை
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலில் சிக்கியுள்ள இலங்கைத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு உச்சகட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்துள்ளார்.
அனுராதபுரம் - ரன்கெத்தகம பகுதியில் நேற்று நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நமது நாட்டுக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் முதுகெலும்பாகத் திகழும் பல இலட்சம் தொழிலாளர்கள் மத்திய கிழக்கில் பணிபுரிகின்றனர். தற்போது அங்கு மூண்டுள்ள மோதலால் அவர்களின் உயிர்களுக்கும் வாழ்வாதாரத்துக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

நாட்டுக்கு 'மூச்சு' தரும் அந்த மக்களைப் பாதுகாக்க வேண்டியது அரசின் தலையாய கடமையாகும். ரணசிங்க பிரேமதாஸவால் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைச் சீருடை மற்றும் மதிய உணவுத் திட்டங்கள் இன்று முறையாகச் செயற்படுத்தப்படவில்லை.
பிள்ளைகளுக்குச் சரியான கல்வியுடன், அறநெறிப் பண்புகளையும் சமச்சீரான உணவையும் வழங்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.
அரசின் மந்தநிலை
தேர்தல் காலத்தில் ஒரு கிலோ நெல்லுக்கு 150 ரூபா தருவோம் என்று வாக்குறுதி அளித்தவர்கள், இன்று 120 ரூபாவைக் கூட வழங்கவில்லை. 80 ரூபாவுக்கு நெல்லை விற்பனை செய்வதால் விவசாயிகள் தமது உற்பத்திச் செலவைக் கூட ஈடுகட்ட முடியாமல் தவிக்கின்றனர்.
இதற்கான தீர்வை வழங்க இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும் எனப் பொறுப்பற்ற விதத்தில் அமைச்சர்கள் கூறுகின்றனர். இலங்கையில் வறுமை அதிகரித்துள்ள சூழலில், அரசு நிலக்கரி இறக்குமதியிலும் முறைகேடுகளைச் செய்கின்றது.

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட 10 கப்பல் நிலக்கரியும் தரமற்றவை. இதனால் 900 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாமல் போயுள்ளது. இதனை அமைச்சர்களே ஒப்புக்கொண்டுள்ளனர்.
ஆளும் தரப்பு அமைச்சர்கள் மகா சங்கத்தினரை அவமதிக்கும் வகையில் செயற்படுகின்றனர். பௌத்த மதத்துக்கு முன்னுரிமை அளிக்கும் அரசமைப்புச் சட்டம் குறித்துப் போதிய தெளிவில்லாத ஒரு குழுவினர் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளனர் என்றார்.

காந்திமதியை வீட்டிற்கு அழைத்த முத்துவேல், நடந்தது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri
ஈஸ்வரி மருத்துவ செலவு இத்தனை லட்சமா, குணசேகரன் புதுபிளான், தர்ஷினி அதிரடி... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam