எந்த தேர்தல் நடத்தப்பட்டாலும் வெற்றி எங்கள் பக்கம்! அசையாத நம்பிக்கையில் சஜித்
நாட்டில் எந்தவொரு தேர்தல் நடத்தப்பட்டாலும் அதில் ஐக்கிய மக்கள் சக்தியே நிச்சயம் மாபெரும் வெற்றி பெறும் என்று எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, "மக்களைப் பாதுகாப்போம் எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று எல்லா வழிகளிலும் மக்களை வதைக்கின்றனர்.
சந்தைக்குச் சென்றால், பொருட்களின் விலைகள் உச்சம். இதயம், வயிறு என எல்லாம் எரிகின்றது. வாழ்வதற்கு உரிய வழி இல்லை. எமது ஆட்சியின் கீழ் சிறந்த நிலைமை உருவாக்குவோம். ‘டீல்’ அரசியலுக்கு இடமில்லை.
சுரண்டிப் பிழைப்பவர்களுக்கும் வாய்ப்பு இல்லை. மக்களுக்கான அரசியலே நடத்தப்படும்.
தேசிய கொள்கையை முன்னிறுத்தி நடவடிக்கைகள் இடம்பெறும். தனிநபர் செல்வாக்குக்கு இடமில்லை" என்றார்.