சஜின் வாஸ் குணவர்தனவுக்கு தொடரும் சிறைவாசம்!
சுமார் 243.8 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களைச் சட்டவிரோதமான முறையில் ஈட்டிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவை, எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதிவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் இந்த வழக்கு நேற்று(24) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இருதரப்பு சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதவான்
இதன்போது சந்தேகநபர் தரப்பினால் முன்வைக்கப்பட்ட பிணைக் கோரிக்கையையும் நீதிவான் நிராகரித்தார்.
சந்தேகநபர் வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு உறுப்பினராகப் பதவி வகித்த காலப்பகுதியில், தனது உத்தியோகபூர்வ வருமானத்திற்கு மேலதிகமாக 243.8 மில்லியன் ரூபாவை ஈட்டியுள்ளார் என்று இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியில் அவர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் இணைந்து மொத்தம் 27 முறை வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார்.
இதில் 17 பயணங்கள் தனிப்பட்ட ரீதியிலும், ஏனையவை குடும்பத்தினருடனும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தப் பயணங்களுக்காகச் சந்தேகநபரின் மனைவியின் வங்கிக் கணக்கொன்றின் ஊடாக 34 மில்லியன் ரூபாவுக்கு அதிகமான பணம் பரிமாற்றப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
மன்றுக்கு முன்வைக்கப்பட்ட இருதரப்புச் சமர்ப்பணங்களையும் பரிசீலித்த நீதிவான், இந்த ஊழல் தொடர்பான விசாரணைகள் இன்னும் முழுமையாக நிறைவடையாத காரணத்தினால் பிணை கோரிக்கையை நிராகரித்தார். அதனடிப்படையில், சந்தேகநபரை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.