பிரதமராகப் பதவியேற்க தயார்! ஜனாதிபதிக்கு அறிவித்தார் சஜித் (Photo)
புதிய அரசாங்கத்தில் பிரதமராகப் பதவியேற்க தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலைக்கு முகங்கொடுத்து குறுகிய கால அரசாங்கமொன்றை அமைக்கத் தயார் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மையில் ஜனாதிபதி தன்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டுக்கொண்டதற்கு இணங்கவும், மகாநாயகர் உள்ளிட்ட சர்வமத தலைவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்தும் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் முன்னணி உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.
அதற்கமைய, சில நிபந்தனைகளுக்கமைய, ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான அனைத்துக்கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணியின் கீழ் இடைக்கால அரசாங்கமொன்றை, அமைப்பதற்கும் ஐக்கிய மக்கள் முன்னணியின் தலைவர் என்றவகையில் பிரதமர் பதவியை ஏற்கவும் தான் தயாராக உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் அக்கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.