சாய்ந்தமருதில் வீதிக்கிறங்கிய கடற்றொழிலாளர்கள்.. விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை!
கடற்பரப்பில் தொடரும் கடல் கொள்ளைக்கு தீர்வு கோரி சாய்ந்தமருது பகுதி கடற்றொழிலாளர்கள் படகுகளுடன் வீதியில் இறங்கி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டமானது இன்று(12.05.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து இடம்பெற்று வரும் கடல் வள கொள்ளை மற்றும் வெளிமாவட்ட கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய கொள்ளை நடவடிக்கைகளுக்கு உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கடற்றொழிலாளர்களின் எதிர்ப்பு
சாய்ந்தமருது பிரதான கடற்கரை வீதியில் நடைபெற்ற இந்த போராட்டத்தின் போது பல கடற்றொழில் படகுகள் வீதிக்கு கொண்டு வரப்பட்டிருந்ததன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
எமது கடல் வளங்களை பாதுகாக்க வேண்டும், உள்ளூர் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றுங்கள் மற்றும் சட்டவிரோத கடல் கொள்ளையை உடனடியாக நிறுத்துங்கள் போன்ற கோசங்களை வெளியிட்டு கடற்றொழிலாளர்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

அத்துடன், வெளிப்பகுதிகளில் இருந்து வரும் சிலர் சட்டவிரோதமான முறையில் மீன்களை சூறையாடுவதால், உள்ளூர் கடற்றொழிலாளர்களின் நாளாந்த வருமானம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக போராட்டக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், பல முறை அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை நிரந்தர தீர்வுகள் எதுவும் வழங்கப்படவில்லை எனவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையீடு செய்து கடற் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், எதிர்காலத்தில் மேலும் தீவிரமான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என போராட்டக்காரர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனையடுத்து, சாய்ந்தமருது பொலிஸ் அதிகாரிகள் இந்த நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.