கோட்டாபய அரசாங்கத்திற்கு அச்சுறுத்தலாக உருவெடுத்த அமைச்சர்கள்: வெளியிலிருந்து சூழ்ச்சி?
அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை மீறி செயற்பட்டு வரும் அமைச்சர்கள் விமல் வீரவங்ச, உதய கம்மன்பில் உள்ளிட்டோர் சம்பந்தமான உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கட்சி என்ற வகையில், ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை விடுக்க உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம்(Sagara kariyawasam) தெரிவித்துள்ளார்.
இந்த தரப்பினரின் செயற்பாடுகள், நடத்தைகள் என்பன அரசாங்கத்தில் எதிர்கால இருப்புக்கு பாரிய அச்சுறுத்தல் மாத்திரமல்லது சிக்கலும் என்பதால், இந்த கோரிக்கையை விடுக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
யுகதனவி மின் உற்பத்தி நிலையம் சம்பந்தமான உரிய உடன்படிக்கை இன்னும் கைச்சாத்திடவில்லை என்பதால், அது குறித்து எந்த வகையிலும் குழப்பமடைய வேண்டாம் என நிதியமைச்சர் பசில் ராஜபக்ச ஆளும் கட்சியின் தலைவர்களின் கூட்டத்தில் தெளிவாக கூறியுள்ளார்.
இவ்வாறான பின்னணியில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இந்த தரப்பினர் அடிப்படையின்றி அரசாங்கத்தை விமர்சித்து வருவது மிகவும் கீழ்த்தரமான செயல். இது வெளியில் இருந்து மேற்கொள்ளப்படும் ஏதோ ஒரு சூழ்ச்சிக்கு அமைய நடக்கின்றதோ என்ற சந்தேகம் பலருக்கு ஏற்பட்டுள்ளது.
யுகதனவி மின் உற்பத்தி நிலையம் தொடர்பில் அடிப்படை இணக்கப்பாட்டுக்கு மாத்திரமே தற்போது வந்துள்ளதாகவும் உடன்படிக்கையை தயாரிக்கும் முன்னர் கட்சிகளின் பரிந்துரைகளை முன்வைக்குமாறு நிதியமைச்சர் அந்த கூட்டத்தில் தெளிவாக கூறியிருந்தார். இப்படி நேர்மையாகவும் நெகிழ்வாகவும் செயற்படும் சந்தர்ப்பத்தில் இந்த தரப்பினர் செயற்படும் விதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.
யாரது தேவைக்காக இவர்கள் இப்படி செயற்படுகின்றனர் என்ற பாரதூரமான கேள்வியும் சந்தேகமும் எழுந்துள்ளது.
அத்துடன் குறித்த உடன்படிக்கையை கட்டாயம் அமைச்சரவையில் தாக்கல் செய்வதாகவும் நிதியமைச்சர் அந்த கூட்டத்தில் உறுதியாக கூறினார் எனவும் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri