புத்தரின் கொள்கைகளை சரத் வீரசேகர நஞ்சாக விதைக்கிறார் - சிவசேனை அமைப்பின் தலைவர் பகிரங்கம்
இலங்கையின் அழிவுக்கான வாயிலாகப் புத்தர் சிலைகளை, புத்த சமயத்தை, புத்தரின் கொள்கைகளை சரத் வீரசேகரா நஞ்சாக விதைக்கிறார் என சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மத வெறியின் வரலாறு
அவ் அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“நல்லாட்சி அரசில் சஜித் பிரேமதாசா அமைச்சராக இருந்தார். வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஆயிரம் புத்தர் சிலைகளை அமைப்போம் எனக் கொக்கரித்தார். கடந்த சில வாரங்களாகவே மேனாள் படைத்தளபதி சரத் வீரசேகர கொக்கரித்து வருகிறார்.
இலங்கை சிங்கள புத்த நாடு. தீவு எங்கும் புத்தர் சிலைகளை வைப்போம் என்கிறார். போரில் வெற்றிக்குப் பின்னால் மத வெறியே வரலாறு. மைசூரைக் கைப்பற்றினோம். மதுரையைக் கைப்பற்றுவோம் என 725 ஆண்டுகளின் முன் அலாவுதீன் கில்ஜியின் படைத்தளபதி மாலிக் கபூர் அதே மத வெறியுடன் தமிழகம் வந்தார். இந்துக் கோயில்களை அழித்தார். அங்குள்ள செல்வங்களைக் கொள்ளையடித்தார்.
கோவில்களை அழித்து மசூதிகள்
தொடர்ந்து அறுபது ஆண்டுகள் தமிழகத்தில் முகமதியர் ஆட்சி. இந்துக் கோயில்கள் இடிந்தன. மசூதிகள் எழுந்தன. இராமநாதபுரத்தின் பெயரே இலாலாபாத் என மாறியது.
அயோத்தியில் பல்லாயிரம் ஆண்டுத் தொன்மையான இராமர் கோயிலை 400 ஆண்டுகளுக்கு முன்பு இடித்தவர் பாபர். அங்கே மசூதியைக் கட்டினார். பாபர் வழிவந்த அவுரங்கசீப் காசியில் அருள்மிகு விசுவநாதர் கோயிலை முற்றாக அழித்து அங்கே மசூதியைக் கட்டினார்.
அலாவுதீன் கில்ஜி, மாலிக் கபூர், பாபர், அவுரங்கசீப் போன்றோர் வரிசையில், போரின் வெற்றியை மத வெறியாக்குகிறார். அந்தப் படைத்தளபதிகளைப் போலவே இந்துக்களை நோக்கிக் கொக்கரிக்கிறார் சரத் வீரசேகர.
450 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையின் தென்கோடியில், பல்லாயிரம் ஆண்டு பழமையான, பல்லவர் திருப்பணி செய்த, சீனர் கல்வெட்டு எழுதிய, அருள்மிகு தென்னாவர நாயனார் கோயிலை கத்தோலிக்க மத வெறியோடு இடித்தவன் தளபதி தோமை சொயிசா. அங்கே உலூயிசா தேவாலயத்தைக் கட்டினார்.
416 ஆண்டுகளுக்கு முன்பு கத்தோலிக்கத் தளபதி கான்ஸ்டன்ட்டைன் கச்ச தீவில் அருள்மிகு கச்சாபகேச்சரர் திருக்கோயிலைத் தரைமட்டமாக்கினார். 405 ஆண்டுகளுக்கு முன் இந்து அரசின் சங்கிலி மன்னனைத் தோற்கடித்த கத்தோலிக்க படைத்தளபதி இடீ லீவரா யாழ்ப்பாணத்தில் 400 சைவக் கோயில்களை இடித்தார். அங்கே தேவாலயங்களைக் கட்டுவித்தார்.மன்னாரில் திருக்கேதீச்சரத்தைத் தடயமே இல்லாமல் முற்று முழுதாக அழித்தார்.
சிங்கள புத்த நாடு என்கிறார் முன்னாள் படைத்தளபதி சரத் வீரசேகரா
தோமை சொயிசா வழியில், கொன்ஸ்டன்ட்டையின் வழியில் இடி லீவரா வழியில், மத வெறியோடு இந்துக் கோயில்களைத் தாக்கியோர்; அழித்தோர், கொக்கிரித்தோர் வழியில் போரில் வெற்றி பெற்ற மதகளிப்பில், வெற்றியைக் கொண்டாடும் மெய்சிலிர்ப்பில் இலங்கை, சிங்கள புத்த நாடு என்கிறார் மேனாள் படைத்தளபதி சரத் வீரசேகர.
வெற்றியும் தோல்வியும் இரவும் பகலும் போல, மாறி மாறி வருவன அறியாரோ, சரத் வீரசேகர? போரின் வெற்றிக்குப் பின்னால் நிதானமும் பெருந்தன்மையும் மாவீரன் அலெக்சாண்டருக்கு இருந்தது.
இலங்கையில் மாவீரன் எல்ளாளனுக்கும் இருந்தது. அத்தகைய நிதானமும் பெருந்தன்மையுமே இலங்கையில் புத்தர் கூறிய அன்பையும் அறனையும் அருளையும் அறிவையும் பெருக்கும்.
இலங்கையின் அழிவுக்கான வாயிலாகப் புத்தர் சிலைகளை, புத்த சமயத்தை, புத்தரின் கொள்கைகளை சரத் வீரசேகர நஞ்சாக விதைக்கிறார்.” படு தோல்வியையே அவர் காண்பார் என மேலும் குறிப்பிட்டுள்ளார்.
|





ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த், சூப்பர்மேன் படங்களின் வசூல் விவரம்.. இதுவரை இத்தனை ஆயிரம் கோடியா Cineulagam
