பதவியை தக்க வைக்க பௌத்த விசுவாசியாக நடிக்கிறார் வடக்கு ஆளுநர்: சபா குகதாஸ்
வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராசா மாநகர சபையைக் கலைப்பேன் என அறிக்கை விட்டதன் நோக்கம் தனது பதவியைத் தக்க வைக்கத் தன்னை பௌத்த விசுவாசியாகத் தனது தலைமை அதிகாரிக்கும் ஆட்சியாளர்களுக்கும் காடுவதற்கேயாகும் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராசா ஆரியகுளத்தில் வெசாக் கூடுகள் கட்டும் விவகாரத்தில் தனது அதிகார எல்லைகளை மீறி எதேச்சதிகார போக்கில் கூறிய விடையங்கள் ஊடக அறிக்கைகளாக வந்துள்ளன அவை மிகவும் வேடிக்கையாக இருக்கின்றன.
ஆரியகுளத்தில் வெசாக் கூடுகள் கட்டும் விவகாரம்
ஆளுநர் முதலில் ஆரிய குளத்தின் வரலாற்றைத் தெரியாதவராக இருக்க முடியாது. அதே போல் யாழ்.மாநகர சபை ஆரியகுளத்தில் எந்த மத அடையாளங்களுக்கும் இடமில்லை என தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளமையும் ஆளுநருக்குத் தெரியும்.
அத்துடன் மாநகர சபை ஒன்றைக் கலைப்பதாக இருந்தால் எவ்வாறான விதிமுறைகளின் அடிப்படையில் ஆளுநரால் கலைக்க முடியும் என்பதும் தெரியும்.
ஆனால் இவை யாவும் தெரிந்தும் மாநகர சபையைக் கலைப்பேன் என அறிக்கை விட்டதன் நோக்கம் தனது பதவியைத் தக்க வைக்கத் தன்னை பௌத்த விசுவாசியாக தனது தலைமை அதிகாரிக்கும் ஆட்சியாளர்களுக்கும் காடுவதற்கேயாகும்.
நாட்டில் பெரும் அவல நிலை ஏற்பட்டும் அதனை சிந்திக்காது வெசாக் கூடு கட்ட அனுமதிக்கவில்லை என்பதற்காகத் தனது சட்ட எல்லைகளை மீறி தெருச் சண்டியன் போல சாரத்தை மடித்துக் கட்டிக் கொண்டு கலைப்பன், விசாரணைக்குழு போடுவன் என்பதெல்லாம் ஆளுநரின் அற்பத்தனமான பதவி ஆசையை வெளிப்படுத்தியுள்ளது.
கடந்த காலத்திலிருந்த ஆளுநர்களுக்கு நடந்த வரலாறுகளை ஆராயத் தவறினால் ஆளுநர்
ஜீவன் தியாகராசாவின் நிலை பரிதாபம் தான்'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.