குற்றவியல் தண்டனைச் சட்டக் கோவை இருக்கும் போது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் எதற்கு..! சபா குகதாஸ் கேள்வி
இலங்கை அரசியலமைப்பில் உள்ள குற்றவியல் தண்டனைச் சட்டக் கோவை இருக்கும் போது அதற்கு மேலதிகமாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் எதற்கு என வட மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்தகால ஆட்சியாளர்களின் நிகழ்ச்சி நிரலில் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நிறைவேற்ற முயற்சிப்பதன் உள் நோக்கம் என்ன எனவும் அவர் வினவியுள்ளார்.
இது தொடர்பில் அவர் இன்றைய தினம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும், கிளீன் சிறிலங்கா என்பது விளம்பர அரசியலா? சகல இன மக்களையும் இன நல்லிணக்கத்துடன் வழி நடத்துவதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவதை தவிர்த்து மக்கள் அச்சப்படும் பெயர் மாற்றுப் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள் எதற்கு?
சிஸ்டம் சேஞ் அநுர அரசின் தேர்தல் கால அரசியலா
கடந்த கால ஆட்சியாளர்கள் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை கொண்டுவர முனைந்த போது கடுமையாக எதிர்த்த அநுர தரப்பு தற்போது அதனை கையில் எடுப்பது ஏன்? அன்று எதிர்த்ததும் அநுரவின் அரசியலா? சிஸ்டம் சேஞ் என்பது அநுர அரசின் தேர்தல் கால அரசியலா என மக்கள் மத்தியில் கேள்விகள் எழ ஆரம்பித்துள்ளன.
எனவே நாட்டில் குற்றச் செயல்களுக்கான தண்டனைச் சட்டக் கோவையில் திருத்தங்களை ஏற்படுத்தி குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கான தண்டனையை வழங்குவது தான் நாட்டு மக்களிடையே அச்சம் மற்றும் சந்தேகம், பயம் போன்றவற்றை இல்லாது ஒழிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
