ஜனாதிபதி மற்றும் சரத் வீரசேகரவிடம் ருவான் விஜயவர்தன விடுத்துள்ள கோரிக்கை
ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஊடக பயனர்களின் கருத்து சுதந்திரத்திற்கு தற்போது மேற்கொள்ளப்படும் தடைகளை கண்டிப்பதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
கட்சியின் துணைத் தலைவர் ருவான் விஜேவர்தன இது தொடர்பில் அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்.
பல ஆண்டுகளாக ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஊடக பயனர்கள் அரசாங்க மற்றும் உயர் பொலிஸ் அதிகாரிகளிடமிருந்து விமர்சனங்கள் மற்றும் மறைமுக அச்சுறுத்தல்களுக்கு ஆளாகியுள்ளனர்.
எனவே, வரலாறு முழுவதும் ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஊடக பயனர்களின், கருத்துச் சுதந்திரத்தின் பாதுகாப்பிற்காக ஐக்கிய தேசியக்கட்சி துணை நின்றதைப்போன்று, எதிர்காலத்திலும் அதனை தொடரும் என ருவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளர்களைத் துன்புறுத்திய குற்றவியல் அவதூறுச் சட்டத்தை அகற்றுவதில் தன்னை ஈடுபடுத்தியவர் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவே என்பதை பலர் மறந்துவிட்டார்கள்.
இந்த நிலையில் ஊடகவியலாளர் தரிந்து எரங்க ஜெயவர்தனவுக்கு தற்போது ஏற்படுத்தப்பட்டு வரும் பிரச்சினைகளை விஜயவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த மாதம் முதலாம் திகதி பேஸ்புக்கில் இந்த பத்திரிகையாளர் பகிர்ந்து கொண்ட ஒரு செய்திக்கு மேல் மாகாணத்தின் பொறுப்பான சிரேஷ்ட அதிகாரி தேசபந்து தென்னகோன் வழங்கிய பதில் ஒரு போலிஸ் அதிகாரிக்கு பொருந்தாத பதிலாகும் என்று விஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.
எனவே, ஜனநாயகத்தின் நான்காவது தூணாகக் கருதப்படும் ஊடகவியலாளர்கள் தங்கள் கடமைகளை சுதந்திரமாகச் செய்ய அனுமதிக்குமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொள்வதாக ருவான் தெரிவித்துள்ளார்.
தரிந்து எரங்க ஜெயவர்தன தனது இணையதளத்தில் ஒரு தவறான செய்தியை வெளியிட்டிருந்தால் அல்லது யாரையும் அவமதித்திருந்தால், இந்த விஷயத்தை தெளிவுபடுத்தி சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.
எனினும், இந்த சுதந்திரத்தை பயன்படுத்துவது தொடர்பில், எந்தவொரு நபருக்கும் அச்சுறுத்தும் உரிமை எந்த தரப்புக்கும் இல்லை என்று விஜேவர்தன கூறினார்.
எனவே இந்த விவகாரம் குறித்து முறையான, பக்கச்சார்பற்ற விசாரணையை நடத்துமாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவிடம், ருவான் விஜயவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் அனைத்து ஊடகவியலாளர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யுமாறு அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் வெகுஜன ஊடக அமைச்சராக முன்னர் பதவி வகித்த விஜேவர்தன கேட்டுள்ளார்.