பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதாகியிருந்த இளைஞன் பிணையில் செல்ல அனுமதி
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதாகியிருந்த இளைஞன் ருஸ்டி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஸ்லேவ் ஐலண்ட் பொலிஸ்நிலையத்திற்கு உட்பட பகுதியில் அமைந்துள்ள வணிகவளாகத்தில் ஸ்டிக்கர் ஒன்றினை ஒட்டியமைக்காக இளைஞன் ருஸ்டி கைது செய்யப்பட்டிருந்தார்.
இளைஞர் கைது
ஸ்லேவ்ஐலண்ட் பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள வணிகவளாகத்தின் ஒரு பகுதியில் காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளிற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞன் ருஸ்டி ஸ்டிக்கர்களை ஒட்டியுள்ளார்.
இதனை தொடர்ந்து இந்த ஸ்டிக்கர்களை படமெடுத்து பொலிஸாருக்கு அனுப்பிய நபர் ஒருவர் இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொலிஸார் யார் அந்த ஸ்டிக்கர்களை ஒட்டிய நபர் என்பதை கண்டுபிடித்துள்ளதுடன் 22ம் திகதி காலை அந்த இளைஞர் அலுவலகத்திற்கு வரும்வேளை அங்கு காத்திருந்து கைதுசெய்தனர்.
அந்த இளைஞர் கைது செய்யப்பட்டவேளை அரச புலனாய்வு பிரிவை சேர்ந்தவர்களும் அங்கு காணப்பட்டனர்.
பயங்கரவாத விசாரணை பிரிவு
கைதுசெய்யப்பட்ட இளைஞன் மேலதிக விசாரணைகளிற்காக பயங்கரவாத விசாரணை பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டார். மேலதிக விசாரணைகளை தொடர்ந்து அவர் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.
இதற்கு பல சிவில் தரப்பிலிருந்தும் அரசியல் வாதிகளிடமிருந்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்ததுடன் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இது தவிர இந்த இளைஞன் தொடர்பில் சமூகஊடகங்களில் பல போலியான செய்திகளும் வெளிவருகின்றன. இந்த நிலையிலே கைது செய்யப்பட்ட இளைஞன் ருஸ்டி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |