உக்ரைனுடனான சந்திப்பில் ரஸ்யாவின் விட்டுக்கொடுப்பு! நேட்டோ விடயத்தில் விடாப்பிடி! (நேரலை)
ரஷ்ய கோடீஷ்வரருக்கு விஷம் வழங்கப்பட்டதாக கூறப்படுவது, ஒரு தகவல் போர்! கிரெம்ளின் அறிவிப்பு!
இந்த மாத ஆரம்பத்தில் நடந்த சமாதானப் பேச்சுக்களில் ரஷ்ய கோடீஸ்வரர் ரோமன் அப்ரமோவிச்சுக்கு விஷம் வழங்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுவதற்கும் யதார்த்தத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கிரெம்ளின் கூறியதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த கதை ஒரு "தகவல் போரின்" பகுதி என்று கிரெம்ளின் குறிப்பிட்டுள்ளது.
அப்ரமோவிச் துருக்கியில் இன்று இடம்பெறும் ரஷ்ய தூதுக்குழுவில் உத்தியோகபூர்வ உறுப்பினராக இல்லை.
இருப்பினும் அவர் உக்ரைனுடனான பேச்சுவார்த்தைகளின் ஆரம்ப கட்டத்தில் அமர்ந்திருந்த புகைப்படம் ஊடகங்களில் பதிவாகியுள்ளது.
ரஸ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் ஆரம்பித்துள்ள அமைதி பேச்சுவார்த்தையின்போது உக்ரைன் நாஸிஸவாதத்தை கைவிடவேண்டும் என்ற தமது கோரிக்கையை விலக்கிக்கொள்ள ரஸ்யா உடன்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நீண்ட கால இராணுவ ரீதியாக இணைக்கப்படாதவரை ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் சேருவதற்கு அனுமதிப்பதற்கும் ரஸ்யா உடன்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் பாதுகாப்பு உத்தரவாதங்களுக்கு ஈடாக உக்ரைன் நேட்டோ உறுப்புரிமைக்கான கோரிக்கையை கைவிடவேண்டும் என்று ரஸ்யா வலியுறுத்தியுள்ளது.
குடிக்கவோ- சாப்பிடவோ -தொடவோ வேண்டாம்! உக்ரைன் துாதுக்குழுவுக்கு எச்சரிக்கை!
ரஷ்ய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள உக்ரைனியர்கள் எவரும் "எதையும் சாப்பிடவோ குடிக்கவோ கூடாது என்றும் எந்த மேற்பரப்பையும் தொடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
துருக்கியின் இஸ்தான்புல்லில் இன்றைய பேச்சுவார்த்தை ஆரம்பிப்பதற்கு முன்னர், உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா இந்த அறிவுறுத்தலை விடுத்தார்.
உக்ரேனிய செய்தி சேனலான Ykpaiha 24 க்கு அளித்த செவ்வியின்போது அவர் இது தொடர்பாக தகவல்களை வெளியிட்டார்.

இந்த மாத ஆரம்பத்தில் உக்ரைன்-பெலாரஸ் எல்லையில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் ரஷ்ய கோடீஸ்வரரான ரோமன் அப்ரமோவிச் மற்றும் உக்ரேனிய பேச்சுவார்த்தையாளர்களுக்கு விஷம் வழங்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுவதை அடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனினும் விஷம் என்று கூறப்படுவது குறித்து சில சந்தேகங்கள் உள்ளன மற்றும் பெயரிடப்படாத அமெரிக்க அதிகாரி ஒருவர் ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தையாளர்களுக்கு ஏற்பட்ட அறிகுறிகள் "சுற்றுச்சூழல்" காரணிகளால் ஏற்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்ய கோடீஸ்வரர் மற்றும் செல்சியா கால்பந்து அணியின் உரிமையாளர்- ரோமன் அப்ரமோவிச்சும், ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான இஸ்தான்புல் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளார்.
துருக்கிய ஊடகங்கள் ஒளிபரப்பிய காணொளிகளில் அவர், துருக்கிய ஜனாதிபதி எர்டோகனின் செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் கலினுடன் ஒரு மேசையில் அமர்ந்திருப்பதை காணமுடிந்தது.
அத்துடன் அவர் மொழிபெயர்ப்புக்கான கருவிகளையும் அணிந்துள்ளார்.
எனினும் அவர் ரஷ்ய மற்றும் உக்ரைனிய பிரதிநிதிகளின் முக்கிய பேச்சுவார்த்தை மேசையில் அமர்ந்திருக்கவில்லை.


இந்தநிலையில் கோடீஸ்வரர்- அப்ரமோவிச், இன்னும் மத்தியஸ்த முயற்சிகளில் ஏதோ ஒரு மட்டத்தில் ஈடுபட்டிருப்பதை தெரிந்துக்கொள்ள முடிகிறது.
இந்த மாத ஆரம்பத்தில் உக்ரைன்-பெலாரஸ் எல்லையில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையின்போது விஷம் வழங்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் அறிகுறிகளை அவர் கொண்டிருப்பதாகவும் தற்போது அவரின் உடல் நிலை தேறி வருவதாகவும் முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
உக்ரைன்- ரஷ்ய நேரடி பேச்சு மீண்டும் ஆரம்பம்!
உக்ரைன் மற்றும் ரஷ்ய பேச்சுவார்த்தையாளர்கள் இரண்டு வாரங்களுக்கு பின்னர் முதன்முறையாக நேருக்கு நேர் பேச்சுவார்த்தைக்காக துருக்கியில் இன்று சந்திக்கின்றனர்.
சந்திப்புக்காக ரஷ்ய மற்றும் உக்ரேனிய தூதுக்குழுவினர் இஸ்தான்புல்லில் உள்ள போஸ்பரஸ் நதிக்கரையில் உள்ள டோல்மாபாஸ் - ஜனாதிபதி எர்டோகனின் அலுவலகத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தமது நாடு,பிரதேசத்தையோ இறையாண்மையையோ விட்டுக்கொடுக்காமல் போர்நிறுத்தத்தை கோருகிறது என்று உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா கூரியுள்ளார்.

உக்ரைன், மக்கள், நிலம் அல்லது இறையாண்மையை வைத்து வியாபாரம் செய்யவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மனிதாபிமான நடவடிக்கைகள் மற்றும் போர்நிறுத்தம் பற்றிய உடன்பாட்டை எட்டுவதே சந்திப்பின் நோக்கம் என்று அவர் தேசிய தொலைக்காட்சியில் தெரிவித்துள்ளார்.
எனினும் உக்ரைன் உள்துறை அமைச்சகத்தின் ஆலோசகர் வாடிம் டெனிசென்கோ, பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும் என்பதில் சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளார்.
அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவரும் முன்னேற்றத்திற்கான நம்பிக்கையில் இதேபோன்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு சமரசம் செய்யத் தயாராக இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கிடையில், கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகளில் கணிசமான முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.
எனினும் நேரடி சந்திப்புக்கள் தொடர்வது முக்கியம் என்று தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த சந்திப்பின்போது முடிவுகளை எட்டவேண்டும் என்று பேச்சுவார்த்தை ஏற்பாட்டாளரான துருக்கியின் ஜனாதிபதி எர்டோகன் வலியுறுத்தியுள்ளார்.