கொழும்பை உலுக்கிய கோர விபத்து - தன்சல் வரிசையில் உயிரிழந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்
கொழும்பின் புறநகரான மீகொட பகுதியில் நேற்று இரவு (31) சிற்றூந்து ஒன்று, அன்னதான வரிசையில் நின்றவர்களின் மேல் மோதியதில் 06 பேர் உயிரிழந்துள்ள கோரமான விபத்து குறித்து தற்போது பல விவரங்கள் வெளியாகியுள்ளன
இந்த விபத்தில் காயமடைந்த மேலும் ஏழு பேர் சிகிச்சைக்காக ஹோமகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர்களின் விபரம்
சம்பவத்தில் 3 ஆண்களும் 3 பெண்களும் உயிரிழந்துள்ளதுடன், ஏழு பேர் காயமடைந்த நிலையில் ஹோமகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதன்போது தானசாலை வரிசையில் நின்றிருந்த 15, 32, மற்றும் 56 வயதுடைய மூன்று பெண்களும், 35, 38 வயதுடைய மூன்று ஆண்களும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிலியந்தல, வெவல பள்ளிய வீதியைச் சேர்ந்த 56 வயதான பி. பி. இந்திராணி என்ற பெண், அவரது 35 வயதான மகள் நவிஷா நிலாக்ஷி, அவரது 38 வயதான மருமகன் லசிகா பிரியங்கர நனயக்கரா மற்றும் உயிரிழந்த பெண்ணின் சகோதரரின் 15 வயதான மகள் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் தம்பதியினரும் உள்ளடங்கியுள்ளதாகவும், பெண்ணும் அவரது கணவரும் அவிசாவெல்லவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சகோதரர்கள்
சனிக்கிழமையன்று பிலியந்தல பள்ளிய வீதியிலுள்ள தங்கள் பெற்றோர் வீட்டிற்கு செல்வதற்காக ஒரு முச்சக்கர வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, வழியில் வரிசையில் காத்திருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்து நடந்தபோது இந்திராணியின் கணவரும், முச்சக்கர வண்டியை செலுத்திய அவரது மகளின் மூத்த குழந்தையும் வாகனத்தில் இருந்ததாகவும், அவர்கள் உயிர் தப்பியதாகவும் கூறப்படுகிறது.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் பாதுக்க துன்னனா பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சகோதரர்களும் உள்ளடங்கியுள்ளனர்.
இந்த விபத்தினை ஏற்படுத்திய பிறகு வாடகைக் கார் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தாமல் சென்ற நிலையில், விரைந்து செயல்பட்ட பொலிஸார் கொடகம சந்திப்பில் சாரதியை கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலை
பிலியந்தலாவைச் சேர்ந்த 42 வயதான சந்தேகநபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேகத்திற்குரிய வாடகைக் கார் சாரதி மதுபோதையில் இருந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஹோமாகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணை இன்று (01) நடைபெற உள்ளதுடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஹோமகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தபடவுள்ளார்.
இந்த விபத்து வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்டது என்றும், சந்தேகநபருக்கு வழங்கப்படக்கூடிய அதிகபட்ச தண்டனையான கொலைக் குற்றத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் முறையான சாரதி அனுமதிப்பத்திரம் இல்லை என்பதும், வாகனத்தின் உரிமமும் முன்பே வழங்கப்பட்டிருந்தது என்பதும் தெரியவந்துள்ளது.
இந்த காரணத்திற்காக வாகனத்தின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
