ரஷ்ய அரசாங்கம் மீது பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவின் அதிரடி குற்றச்சாட்டு
ரஷ்யாவின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான அலெக்ஸி நவால்னி, அரிய வகை நச்சு பயன்படுத்தி கொல்லப்பட்டார் என பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடுமையான குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளன.
சைபீரிய சிறைச்சாலையில் நவால்னி உயிரிழந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அவரது உடலில் கண்டறியப்பட்ட மாதிரிகள் மீதான ஆய்வுகளின் அடிப்படையில் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
நவால்னி சிறையில் இருந்தபோது இந்த நச்சை பயன்படுத்தும் திறன், நோக்கம் மற்றும் வாய்ப்பு ரஷ்ய அரசுக்கே இருந்தது என பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் யோவேட் கூப்பர்தெரிவித்துள்ளார்.

முனிச் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
நவால்னியின் உடலில் “எபிபடிடின்” (Epibatidine) எனப்படும் அரிய நச்சுப் பொருள் கண்டறியப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த முடிவை சுவீடன், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் ஆதரித்துள்ளன.
அந்த அறிக்கையில், “இந்த மரண நச்சை நவால்னி மீது பயன்படுத்துவதற்கான வசதி, நோக்கம் மற்றும் வாய்ப்பு ரஷ்ய அரசுக்கே இருந்தது. எனவே அவரது மரணத்திற்கு ரஷ்யாவே பொறுப்பு” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எபிபடிடின் என்பது தென் அமெரிக்காவில் காணப்படும் சில காட்டு ‘டார்ட்’ தவளைகளில் இயற்கையாக காணப்படும் அரிய நச்சு. ரஷ்யாவில் இது இயற்கையாக இல்லை என்றும் கூட்டறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நச்சு “மார்ஃபீனைவிட 200 மடங்கு சக்திவாய்ந்தது” என்றும், மத்திய நரம்பு மண்டலத்தை தாக்கி தசை வலி, பக்கவாதம், மயக்கம், இதய துடிப்பு குறைவு, சுவாச செயலிழப்பு மற்றும் இறப்பு ஏற்படுத்தக்கூடும் எனவும் நச்சியல் நிபுணர் ஜில் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
இக்குற்றச்சாட்டை ரஷ்யா முற்றிலும் நிராகரித்துள்ளது. ரஷ்ய அரசாங்கப் பேச்சாளர் மாரியா ஷகரோவா இதை “மேற்கத்திய நாடுகளின் தகவல் பிரச்சாரம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின், நவால்னி மரணத்திற்குப் பிறகு ஒரு மாதத்துக்கு பின்னர், “ஒரு மனிதர் இறப்பது எப்போதும் துயரமானது” என மட்டுமே கூறியிருந்தார்.
நவால்னியின் மனைவி Yulia Navalnaya, தனது கணவர் விஷம் வைத்து கொல்லப்பட்டார் என்ற சந்தேகத்தை முன்பே வெளியிட்டிருந்தார்.
தற்போது வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகள் அதனை உறுதிப்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.
“முதல் நாளிலிருந்தே அவர் விஷம் வைக்கப்பட்டார் என்று நம்பினேன். இப்போது அதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது,” என அவர் கூறியுள்ளார்.