ஜனாதிபதிகளைக் கடத்தும் அமெரிக்கா எப்படி அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த முடியும் : ரஷ்யா சாடல்
சர்வதேச மோதல்களைத் தீர்ப்பதற்கான ஒரு நடுநிலையாக செயற்படும் தகுதியை அமெரிக்கா இழந்துவிட்டதாக ரஷ்யப் பாதுகாப்பு பேரவையின் துணைத் தலைவர் டிமிட்ரி மெத்வதேவ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இன்று(30.04.2026) நடைபெற்ற கல்வி மாநாடு ஒன்றில் கலந்துகொண்ட போதே அவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினார்.
அத்துடன், மற்ற நாடுகளின் ஜனாதிபதிகளை கடத்துவதும், தன்னிச்சையாக முறைகளில் போர்களைத் தொடங்குவதும் அமெரிக்காவின் வாடிக்கையாகிவிட்டதாகவும் அவர் மேலும் குற்றம் சாட்டினார்.
பெரும் ஊதியம் வழங்கும் ஒப்பந்தம்
குறிப்பாக, வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவைக் கடத்த அமெரிக்கா மேற்கொண்ட முயற்சி மற்றும் தற்போதைய ஈரான் போர் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டிய அவர், இத்தகைய செயல்களில் ஈடுபடும் ஒரு நாடு எப்படி அமைதிப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க உதவ முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், உக்ரைன் விவகாரத்தில் ட்ரம்ப் நிர்வாகம் அமைதியை பேணுவதற்கு முயற்சிப்பதாக மெத்வதேவ் ஒப்புக்கொண்டாலும், ஐரோப்பிய நாடுகள் தற்போது மேற்கொண்டு வரும் இராணுவ மயமாக்கல், இரண்டாம் உலகப் போரை நினைவூட்டுவதாக எச்சரித்துள்ளார்.
அத்துடன், ரஷ்ய இராணுவத்தில் சேர மக்கள் காட்டி வரும் ஆர்வம் குறித்தும் அவர் தகவல் பகிர்ந்துள்ளார்.
2025-ஆம் ஆண்டில் சுமார் 4,50,000 பேரும், நடப்பு ஆண்டில் இதுவரை 1,27,000 பேரும் ஒப்பந்த அடிப்படையில் ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, உக்ரைன் போர் ஐந்தாவது ஆண்டை எட்டியுள்ள நிலையில், கட்டாய ஆட்சேர்ப்பைத் தவிர்த்து, பெரும் ஊதியம் வழங்கும் ஒப்பந்த முறை மூலம் வீரர்களைத் திரட்டுவதில் மாஸ்கோ கவனம் செலுத்தி வருகிறது எனவும் குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன், ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் தங்களது தரப்பு உயிர்ச்சேதங்கள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிடாத நிலையில், பிபிசி மற்றும் மீடியாசோனா நடத்திய ஆய்வில் இதுவரை சுமார் 2,13,858 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அமெரிக்காவின் சர்வதேச அரசியல் நகர்வுகள் அதன் நம்பகத்தன்மையைக் குறைத்துள்ளதாக மெத்வதேவ் கூறியுள்ள இந்தக் கருத்துக்கள், கிரெம்ளின் மாளிகையின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டிலிருந்து சற்றே மாறுபட்டுக் காணப்பட்டாலும், சர்வதேச அரங்கில் ரஷ்யாவின் கடும் போக்கையே இது பிரதிபலிக்கிறது.