அநுர அரசாங்கத்தில் ஊழல் இல்லை! மட்டக்களப்பு எம்.பி. பிரபு பெருமிதம்..
தற்போதைய நிலையில், ஏனைய நாடுகளில் எரிபொருள் விலை பாரியளவில் அதிகரித்துள்ளது. எனினும், இலங்கையில் அப்படியொரு நிலை ஏற்படாத வண்ணம் அரசாங்கம் நாட்டை சரியான முறையில் கொண்டு செல்கின்றது என ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்றையதினம்(29.04.2026) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அரசின் முறையான செயற்றிட்டங்கள்
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
திறைசேரியில் நிதி மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக எதிர்கட்சியினர் குற்றம் சுமத்தி வருகின்றனர். ஆனால், கடந்த காலங்களில் நாட்டை நிர்வகித்த ஆட்சியாளர்கள் பயன்படுத்தி வந்த தொழிநுட்பங்களின் ஊடாகவே இந்த தவறுகள் நேர்ந்துள்ளன.

நிலக்கரி தொடர்பான ஊழலினை ஆராய்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமித்திருக்கின்றோம். அதனூடாக உண்மையை வெளிக்கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கடந்த கால ஆட்சியாளர்கள் இந்த நாட்டை வங்குரோத்து நிலைமைக்குக் கொண்டு வந்தது மட்டுமல்லாமல் நாட்டை நிர்வகிக்க முடியாத நிலைமையில் விட்டுச் சென்றிருந்தார்கள்.
ஒட்டுமொத்தமாக கடந்த காலங்களிலே இந்த நாட்டை நிர்வகித்தவர்களும், ஆட்சியாளர்களும் நம்முடைய நாட்டை ஒட்டுமொத்தமாக அழிவுக்கு இட்டுச் சென்றிருந்தார்கள்.

ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமான நாங்கள் பொறுப்பேற்றதன் பின்னர், ஜனாதிபதியின் ஆலோசனைனக்கு அமைவாக மக்கள் நலன் சார்ந்த விடயங்களிலேயே அதிக கவனம் செலுத்தி வருகின்றோம்.
கடந்த கால அரசியல்வாதிகள், தங்களது சுகபோகத்திற்காகவும், தமது சுயநலத்திற்காகவும் அரச நிதியை வீணடித்திருந்த நிலையில், அந்த கலாசாரத்தை நாம் மாற்றியமைத்து மக்கள் நிதிகளை சேமிக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளோம்.ஊழல் செய்யாத ஒரு அரச கட்டமைப்பை நாங்கள் உருவாக்கியிருக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த நிகழ்வில், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் தங்கத்துரை சுபாஸ்கரன், திணைக்கள அதிகாரிகள், தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்கள், பிரஜாசக்தி தலைவர்கள் மற்றும் பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இலங்கையில் முடிவிற்கு வரும் வங்கியொன்றின் நடவடிக்கைகள் - இன்றுடன் நிரந்தரமாக மூடப்படும் வங்கிக் கிளைகள்