நுகர்வோர் அதிகார சபையினரால் முற்றுகையிடப்பட்ட களஞ்சியசாலை(Photos)
மனித பாவனைக்கு உதவாத மல்லியை பதுக்கி வைத்திருந்த வர்த்தக களஞ்சியசாலை மீது அம்பாறை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையினரால் திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த சுற்றிவளைப்பானது நேற்றையதினம்(08.08.2023) அம்பாறை - கல்முனை 03 அம்மன் கோயில் வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் போது, மனித பாவனைக்கு உதவாத பழுதடைந்த 84875 கிலோ மல்லி மற்றும் 300 கிலோ நிறச்சாயம் (டை) என்பன பதுக்கி வைத்திருந்த வர்த்தக களஞ்சியசாலை அடையாளம் காணப்பட்டதோடு, மாவட்ட நுகர்வோர் அதிகார சபையினரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
நீதிமன்றில் வழக்குத் தாக்கல்
குறித்த சுற்றிவளைப்பில் 44 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அம்பாறை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையினரால் மேற்கொள்ளப்பட்ட இச்சுற்றிவளைப்பில் திருக்கோவில் விசேட அதிரடிப்படையினரும் புலனாய்வு பிரிவினரும் பங்கேற்றதுடன் அம்பாறை மாவட்டத்தில் இவ்வாறு மனித பாவனைக்கு உதவாத பொருட்களை களஞ்சியப்படுத்தும் வர்த்தகர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கெதிராக நீதவான் நீதிமன்றில் அம்பாறை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையின் சட்டத்துக்கமைய வழக்குத் தாக்கல் செய்யப்படுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் அட்டாளைச்சேனை, நிந்தவூர், சம்மாந்துறை, இறக்காமம், அம்பாறை ஆகிய பிரதேசங்களில் கட்டுப்பாட்டு விலையை மீறி கூடுதலான விலைக்கு உரம் விற்பனை செய்வதாக தகவல் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், இவ் உர விற்பனை நிலையங்களில் திடீர் சுற்றிவளைப்புகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அம்பாறை மாவட்ட நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.







