திருகோணமலையில் கொந்தளிக்கும் கடல்! ஸ்தம்பிதமடைந்த கடற்றொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை
திருகோணமலை மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக நிலவி வரும் கடும் கடல் கொந்தளிப்பு காரணமாக, கடற்றொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்தபகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர் மழை மற்றும் மகாவலி கங்கை பெருக்கெடுப்பு என இயற்கைச் சீற்றங்களினால் கடந்த ஒரு மாத காலமாகத் தொழிலுக்குச் செல்ல முடியாமல் கடற்றொழிலாளர்கள் பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர்.
சீரற்ற காலநிலை
திருகோணமலை மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாகக் கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படுகின்றது.

இதன் காரணமாகக் கடல் நீர் ஊடுருவும் அபாயம் ஏற்பட்டுள்ளதோடு, கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி உபகரணங்களைப் பாதுகாப்பதில் கடற்றொழிலாளர்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
தமது வாழ்வாதாரமான படகுகள் மற்றும் வலைகளைச் சேதமடையாமல் பாதுகாப்பதற்காக, கடற்றொழிலாளர்கள் ஒன்றிணைந்து அவற்றை கடற்கரையிலிருந்து அப்புறப்படுத்தி வருகின்றனர். பல இடங்களில் படகுகள் வீதியோரங்களுக்குப் பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகத் தமது உடைமைகளை எங்கே பாதுகாப்பது என்று தெரியாமல் கடற்றொழிலாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
கடற்றொழிலாளர்கள் கோரிக்கை
ஏற்கனவே கடந்த ஒரு மாத காலமாக நிலவி வரும் கனமழை மற்றும் மகாவலி கங்கை பெருக்கெடுப்பு காரணமாக கடற்றொழிலாளர்கள் எவரும் கடலுக்குச் செல்லவில்லை. ஆற்று நீர் கடலில் கலப்பதால் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் தொடர் காற்றினால் கடற்தொழில் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது.

"கடந்த ஒரு மாதமாக மழையிலும் வெள்ளத்திலும் நாங்கள் கடலுக்கு செல்லவில்லை. இப்போ கடல் ரொம்ப கொந்தளிப்பா இருக்கு. வலைகளையும் படகுகளையும் காப்பாற்ற வீதிக்கு வருகின்றோம். வருமானம் இல்லாம குடும்பத்தை நடத்தவே ரொம்ப கஷ்டமா இருக்கு” என்று கடற்றொழிலாளர் ஒருவர் தெரிவித்தார்.
தொடர்ச்சியான இயற்கைச் சீற்றங்களினால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள தமக்கு, உரிய அதிகாரிகள் நஷ்டஈடு வழங்க வேண்டும் அல்லது தற்காலிக நிவாரணங்களை வழங்க முன்வர வேண்டும் எனத் திருகோணமலை கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri