ரோல்ஸ் ரொய்ஸ் காரால் வந்த சிக்கல்..! ஜி.எல். பீரிஸ் - டட்லி சிறிசேன இடையில் கடும் வாக்குவாதம்
அண்மையில் நடைபெற்ற இத்தாலிய தேசிய தினக் கொண்டாட்ட நிகழ்வில் முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மற்றும் பிரபல தொழிலதிபர் டட்லி சிறிசேன ஆகியோருக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இத்தாலிய தூதரகம் கடந்த 2 ஆம் திகதி ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் இருவரும் கலந்துகொண்டிருந்த நிலையில், அங்கு இடம்பெற்ற உரையாடலின் போதே இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
வவுனியாவை அதிரவைத்த சிறுவர் பாதாளக் குழு: மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய 7 பேர் அதிரடியாக கைது
காரசாரமான வாக்குவாதம்
வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறும் சூழல் உருவானதால், நிகழ்வில் பங்கேற்றிருந்த பிற விருந்தினர்கள் தலையிட்டு நிலைமையை கட்டுப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடி தொடர்பாக பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் அண்மையில் வெளியிட்ட கருத்தே இந்த மோதலுக்குக் காரணமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

டட்லி சிறிசேன நாட்டிற்கு இறக்குமதி செய்திருந்த ரோல்ஸ் ராய்ஸ் கார், நாட்டின் வரிச்சுமை அதிகரிப்பதற்கும் டொலர் பெறுமதி உயர்வதற்கும் காரணங்களில் ஒன்றாக இருந்ததாக பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்தக் கருத்தால் அதிருப்தியடைந்திருந்த டட்லி சிறிசேன, நிகழ்வின் போது பேராசிரியரிடம் அதுகுறித்து நேரடியாகக் கேள்வி எழுப்பியதையடுத்து வாக்குவாதம் தொடங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடும் அதிருப்தி
இதன்போது தனது ரோல்ஸ் ராய்ஸ் வாகனம் எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கையாலும், கமிஷன் பணத்தாலும் அல்லது வரிச்சலுகை அனுமதிப்பத்திரத்தின் மூலமோ இறக்குமதி செய்யப்படவில்லை என டட்லி சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.
தனது தொழில் முயற்சிகளின் மூலம் நேர்மையாக சம்பாதித்த பணத்தில் அரசுக்கு செலுத்த வேண்டிய அனைத்து வரிகளையும் சட்டப்படி செலுத்தியே குறித்த வாகனத்தை இறக்குமதி செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சிறுவயதிலிருந்தே ரோல்ஸ் ராய்ஸ் போன்ற சொகுசு வாகனங்களில் பயணித்தவர்களுக்கு மட்டுமே அத்தகைய வாகனங்களை பயன்படுத்தும் உரிமை உள்ளதா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஏழ்மையான குடும்பப் பின்னணியில் இருந்து கடின உழைப்பின் மூலம் முன்னேறி இத்தகைய வாகனத்தை வாங்கியிருப்பதை சிலர் பொறாமையுடன் பார்க்கின்றனர் என்றும், அதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் விமர்சிக்கின்றனர் என்றும் டட்லி சிறிசேன கடும் அதிருப்தி வெளியிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்... பிரித்தானியா உட்பட ஐந்து நாடுகள் விடுத்த எச்சரிக்கை News Lankasri
சொந்த நட்சத்திரத்தில் ராகு பெயர்ச்சி... நிதி நிலையில் எதிர்பாராத அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்! Manithan