நீதவானின் வீட்டில் கொள்ளை : தனிநபர் பாதுகாப்பின்மையின் உச்சக்கட்டம் - சட்டத்தரணி சுகாஷ்
மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி த.கருணாகரன் தாக்கப்பட்டு, அவரின் மனைவியின் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டமை தனிநபர் பாதுகாப்பின்மையின் உச்சக்கட்டம் என தமிழர் உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஒருங்கிணைப்பாளர் சட்டத்தரணி சுகாஷ் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி தாக்கப்பட்டுக் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,
இச்சம்பவத்தை “தமிழர் உரிமைகள் கண்காணிப்பகம்” (Tamil Rights Watch) மிக வன்மையாகக் கண்டிப்பதோடு சகல சட்டத்தரணிகள் சங்கங்களையும் உடனடியாகக் கூடிக் காத்திரமான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு உரிமையுடன் கோருகின்றது.
நீதியை நிலைநாட்ட வேண்டிய நீதிபதிகளின் பாதுகாப்பே கேள்விக் குறியாகும்போது
சாதாரண மக்களின் பாதுகாப்பு பற்றிப் புரிந்துகொள்வதற்கு வெகுநேரம் ஆகாது
என்பதனை “தமிழர் உரிமைகள் கண்காணிப்பகம்” இத்தருணத்தில் சுட்டிக்காட்டுகின்றது
என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.