வட்டுவாகல் மீனவர்களின் பாதைப் பிரச்சினைக்கு விரைவில் முடிவு : அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Video)
முல்லைத்தீவு - வட்டுவாகல் பகுதி மீனவர்கள் கடற்தொழிலுக்கு செல்லும் பாதைப் பிரச்சினைக்கு விரைவில் முடிவு எடுக்கப்படும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (16.02.2023) முல்லைத்தீவு மாவட்டத்திற்குப் பயணம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வட்டுவாகல் பகுதியில் மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் நேரில் சென்று பார்வையிட்டபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, காணி விடுவிப்பு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் மற்றும் ஜனாதிபதி தலைமையிலான உயர்மட்ட கூட்டத்தில் இது குறித்து கோரிக்கை விடுத்தபோது, பாதையை நேரில் சென்று பார்த்துத் தீர்த்துவைக்குமாறு ஜனாதிபதி என்னிடம் பணிப்புரை விடுத்தார்.
இன்று வந்து சம்மந்தப்பட்டவர்களுடன் கதைத்துள்ளேன் விரைவில் அதற்கான முடிவு
எட்டப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வட்டுவாகல் பகுதி மீனவர்கள் கடற்தொழிலுக்கு செல்லும் பாதையில் படையினரின் முகாம் அமைந்துள்ளதால் அந்த பாதையினை திறந்து விடுமாறு நீண்ட நாட்களாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், குறித்த வீதியின் பகுதிக்கு இராணுவ முகாம் அமைந்துள்ள பகுதிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சென்றுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சிடம் கலந்துரையாடல்
இதன்போது முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர், கடற்தொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகள், மீனவர்களுடன் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.திலீபன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
காணி வரைப்படம் ஊடாக 59ஆவது படைப்பிரிவினை சேர்ந்த இராணுவ அதிகாரிக்கு அரச அதிகாரிகளால் எடுத்துரைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சிடம் கலந்துரையாடவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“இதுவரை தங்களை இராணுவம் வீதியால் செல்லவோ இராணுவ காணியில் உள்ள ஆலய வழிபாட்டிற்கு விடவோ இல்லை” என மீனவர்கள் அமைச்சரிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாவட்ட மீனவர்கள்
அத்துடன், மன்னார் மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடத்தியுள்ளார்.
இதன்போது, இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறலினால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பாகச் சுட்டிக்காட்டிய கடற்றொழிலாளர்கள், குறித்த அத்துமீறலைக் கட்டுப்படுத்துவதற்கு போதிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டினர்.
கடற்றொழிலாளர் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளின் கருத்துக்களைக் கேட்டறிந்த
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சட்டவிரோத தொழில் செயற்பாடுகளைக்
கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பாகத்
தெளிவுபடுத்தியதுடன், முழுமையாகச் சட்டவிரோத தொழில் முறைகளைக்
கட்டுப்படுத்துவதற்கு கடற்றொழிலாளர்களின் பங்களிப்பின் அவசியத்தையும்
வலியுறுத்தினார்.
இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் கே.திலீபனும் கலந்து
கொண்டமை குறிப்பிடத்தக்கது.