மழை வெள்ளத்தில் அள்ளுண்டு போன வீதி : அதிகாரிகளின் அசமந்த போக்கு
மட்டக்களப்பு - மண்டூர் கமநல சேவை நிலையத்திற்குட்பட்ட ஆனைகட்டியவெளி நெடியவட்டை பிரதான வீதி அண்மையில் பெய்த பலத்த மழை வெள்ளத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
விவசாய வீதியாகக் காணப்படும் இவ்வீதியை சம்மந்தப்பட்டவர்கள் இனியும் கவனிக்காமல் விடாது உடன் அதனை நிரந்தரமாகப் புணரமைப்புச் செய்துதர வேண்டும் என அவ் வீதியைப் பயன்படுத்தும் மக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வீதியின் புணரமைப்பு தொடர்பில் போரதீவுப் பற்று பிரதேச சபையின் தவிசாளர் யோ. ரஜனியிடம் வினவியபோது குறித்த வீதி வருடாந்தம் இவ்வாறு மாரிமழை காலத்தில் பழுதடைவது வழக்கமாகவுள்ளது.
இந்த வீதி கமநல சேவைத் திணைக்களத்திற்குச் சொந்தமானது.
எனவே இந்த வீதியை எமது பிரதேச சபைக்குக் கையளிக்குமாறு நாம் பல தடவை கோரிக்கை விடுத்துள்ள போதிலும் அதனை அவர்கள் நடைமுறைப்படுத்தாமல் உள்ளனர் என தவிசாளரை கோடிட்டு எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.