முள்ளிவாய்க்கால் கிழக்கு விவசாய வீதியைச் சீரமைப்பதற்கான வேலைகள் முன்னெடுப்பு
முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் கிழக்கு கமக்கார அமைப்பிற்குட்பட்ட பிலவெளி, கமவெளி, புறக்கட்டுவெளி, கோயில்தறைவெளி உள்ளடங்கலான வயல்நிலங்களுக்கு செல்லும் வீதியைச் சீரமைப்பதற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் இன்றையதினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனின் கோரிக்கையை ஏற்று முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தினாலேயே குறித்த விவசாய வீதியின் சீரமைப்பிற்கான ஆரம்பக்கட்ட பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
விவசாயிகளுக்கு இடர்பாடு
முள்ளியவளை கமநலசேவைநிலயப் பிரிவிலுள்ள, முள்ளிவாய்க்கால் கிழக்கு கமக்கார அமைப்பிற்குட்பட்ட பிலவெளி, கமவெளி, புறக்கட்டு வெளி, கோயில்தறைவெளி உள்ளடங்கலான வயல்நிலங்களுக்குச் செல்லும் பாதை சீரின்மையால் விவசாயிகள் பெருத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் விவசாயிகளின் முறையீட்டையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடந்த 14.08.2025 அன்று குறித்த பகுதிக்கு நேரில் சென்று நிலமைகளை ஆராய்ந்தார்.
குறிப்பாக 300 ஏக்கர் வரையான விவசாய நிலங்களுக்கு செல்வதற்காகப் பயன்படுத்தப்படும் சுமார் 2 கிலோமீற்றர் தூரமான குறித்த விவசாய வீதி சீரின்றிக் காணப்படுவதால் விதைநெல், உரம் உள்ளிட்ட விவசாய உள்ளீடுகளை எடுத்துச் செல்வதிலும், அறுவடைசெய்த நெல்லினை எடுத்துச் செல்வதிலும் அப்பகுதி விவசாயிகள் நீண்டகாலமாக பெருத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
கோரிக்கை முன்வைப்பு
இந்நிலையில் விவசாயிகளின் குறைபாடுகளைக் கேட்டறிந்து கொண்ட ரவிகரன், குறித்த வீதியைச் சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு முள்ளியவளை கமநலசேவைநிலைய அபிவிருத்தி உத்தியோகத்தரிடம் கோரிக்கை முன்வைத்திருந்தார்.
வீதியை சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென முள்ளியவளை கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் பேரம்பலம் தயாரூபன் நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்திருந்தார்.








