மன்னாரில் கோர விபத்து: ஒருவர் உயிரிழப்பு- ஐவர் பலத்த காயம் (Photos)
மன்னாரில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.
இச்சம்பவம் மன்னார் - பிரதான பாலத்திற்கு அருகில் இன்றைய தினம் (23.05.2023)காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மன்னாரில் இருந்து பிரதான பாலம் ஊடாக பயணித்த மகேந்திரா ரக வாகனம் மற்றும் மதவாச்சி வீதியூடாக மன்னார் நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டியும் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன் - மனைவி உட்பட 9 வயது, 6 வயது, 4 வயதுடைய மூன்று குழந்தைகள் உள்ளடங்களாக ஐவர், நாளைய தினம் (24.05.2023) இடம்பெறவுள்ள திருமண நிகழ்வு ஒன்றுக்கு முச்சக்கரவண்டி ஒன்றில் மன்னாருக்குச் சென்ற நிலையில், குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மன்னாரில் இருந்து தள்ளாடி நோக்கிப் பயணித்த மகேந்திரா ரக வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, முச்சக்கரவண்டியில் மோதிய நிலையில் முச்சக்கரவண்டி சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அதேநேரம் பலத்த காயங்களுடன் ஏனையோர் மன்னார் பொது வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |