இலங்கையிலுள்ள அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்படும் அபாயம்
எதிர்வரும் ஜுன் மாதத்திற்குள் நாட்டில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்படும் அபாயம் உள்ளதாக முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சமகால பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் தயாரித்துள்ள அறிக்கைக்கு அமைய இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியின் அளவு விளங்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்திய கடன் சலுகையில் இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள் மே மாதத்துடன் முடிவடையும். மருந்து மற்றும் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட கடன் சலுகை ஜுன் மாதத்துடன் முடிவடையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் தான் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் தெரியப்படுத்தியதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.



