தமிழர் பகுதியில் பல பாடசாலைகள் மூடப்படும் அபாயம்
தமிழர் பிரதேசத்தில் இனவிருத்தி குறைந்து செல்வதால் பல வரலாற்று பாடசாலைகள் மூடப்படும் அபாயம் என உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் தெரிவித்துள்ளார்.
நேற்று(10.02.2026) நடைபெற்ற உடுவில் மான்ஸ் மகா வித்தியாலத்தின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டியில் விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்தபோது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நகரத்தை நோக்கி நகர்வதனால்
மேலும் தெரிவிக்கையில், இன்றைய தலைமுறையினர் ஆரோக்கியம் குறைந்தவர்களாக உருவெடுக்கின்றனர். அதனால் நம்பிக்கை இல்லா வாழ்க்கையை முன்னெடுப்பதுடன் தனது பரம்பரையை வலுவாக்க தவறுகின்றனர்.

போட்டிமிக்க சவால்மிக்க வாழ்கையை எளிதாக வெற்றி கொள்ள கற்றுத்தருவது விளையாட்டுப்போட்டி. அதனை பங்குபற்றுதல் மூலம் உறுதிப்படுத்த வேண்டும்.
இருந்தபோதும் பல பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றது. முதலாம் ஆண்டில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியாகவே காணப்படுகின்றது.
சில பாடசாலைகளில் அனுமதி பெறுவதற்கு தவம் கிடக்கும் பெற்றோர், அதற்காக எவ்வளவு விலைகொடுக்கவும் தயாராக உள்ளனர். இது மாறவேண்டும். ஏனெனில் எமது வரலாற்று பாடசாலைகள் மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி கண்டு மூடப்படும் அபாயகட்டத்தில் உள்ளது.
முன்னைய காலங்களில் கிராமப்புறங்களில் பிறப்பு வீதம் குறைவதில்லை அதிகமாகவே காணப்படும். ஆனால் இன்று மாறாக பிறப்பு வீதம் குறைந்து இறப்பு வீதம் அதிகரித்துள்ளது. நகரத்தை நோக்கி நகர்வதனால் கிராமப்புற பாடசாலைகள் கையறுநிலையில் இருப்பதுடன், அத்துடன் எம் மூதாதையர்களின் நோக்கமும் சிதைகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு அருகில் இருக்கும் பாடசாலைகளை பாதுகாக்க வேண்டியது பெற்றோர்கள், பழைய மாணவர்கள் சமூகத்தினரது தார்மீக கடமையாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

