ரிஷாத் வீட்டில் சிறுமி எழுதியதாக கூறப்படும் விடயம் பொய் - நாடாளுமன்றில் ஆவேசம்
ரிஷாத் வீட்டில் சிறுமி எழுதியதாக கூறப்படும் விடயம் பொய்யென இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆவேசமாக கருத்து வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்றில் வைத்து இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ரிஷாத்தின் வீட்டில் உயிரிழந்த சிறுமி தொடர்பில் கேவலமான அரசியலை செய்து வருகிறார்கள். 18 வயதோ, 14 வயதோ 40 வயதோ யாருக்கு தவறு நடந்தாலும், தவறு தவறுதான்.
8 வருடங்களாக இதுபோன்ற சம்பவங்கள் ரிஷாத் வீட்டில் நடந்துள்ளதாக வாக்குமூலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ரிஷாத் தான் இதற்கு காரணமென நான் கூறவில்லை.
ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கவிட்டமைக்கு அவரும் ஒரு காரணம். பாதிக்கப்பட்ட சிறுமி ரிஷாத் வீட்டில் எழுதியதாகக் கூறுகிறார்கள்.
இதெல்லாம் பொய். இதுபோன்ற விடயங்களை வேடிக்கைப் பார்க்கப் போவதில்லை. சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
கடுமையான தண்டனை வழங்குவதன் ஊடாகவே, இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடப்பதை தவிர்க்க முடியும்.
மேலும் 18 வயதுக்குக் குறைவான சிறுவர்களை வேலைக்கு அனுப்பும் பெற்றோர்களையும் தண்டிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் 18 வயது வரையில் இலவச கல்வியை கட்டாயமாக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.