மின்சார வாகனங்களின் விலையில் மாற்றம்! ஏற்பட்டுள்ள புதிய புரட்சி
சீனாவின் முன்னணி மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனமான BYD, தனது உலகப்புகழ் பெற்ற 'பிளேட் பேட்டரி'யின் அடுத்த தலைமுறைப் பதிப்பை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய பேட்டரி, மின்சார வாகனத் துறையில் நிலவும் முக்கியப் பிரச்சினைகளான மெதுவான சார்ஜிங் வேகம் மற்றும் குளிர்காலங்களில் பேட்டரி செயல்திறன் குறைவது ஆகியவற்றுக்குத் தீர்வாக அமையும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இரண்டாம் தலைமுறை
குறிப்பாக, கடும் குளிர் நிலவும் சூழல்களிலும் இந்த பேட்டரி மிக வேகமாக சார்ஜ் ஆகும் திறனைக் கொண்டுள்ளதோடு, வாகனத்தின் மைலேஜையும் (Range) கணிசமாக அதிகரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டாம் தலைமுறை பிளேட் பேட்டரியானது, 10 சதவீதத்திலிருந்து 80 சதவீத சார்ஜிங்கை வெறும் 10 நிமிடங்களுக்குள் எட்டிவிடும் அதிவேக சார்ஜிங் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது.
மேலும், முந்தைய பேட்டரிகளை விட அதிக ஆற்றல் அடர்த்தியைக் (Energy Density) கொண்டுள்ளதால், வாகனத்தின் எடை அதிகரிக்காமல் அதிக தூரம் பயணிக்கும் வசதியை இது வழங்குகிறது.
மின்சார வாகனங்களின் விலை
டெஸ்லா போன்ற உலகளாவிய நிறுவனங்களுக்குப் போட்டியாக, BYD நிறுவனம் தனது சொந்த தயாரிப்பு செலவைக் குறைக்கவும், மின்சார வாகனங்களின் விலையைச் சாமானியர்களுக்கும் எட்டும் வகையில் கொண்டு வரவும் இந்த புதிய தொழில்நுட்பம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது மின்சார வாகனச் சந்தையில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தும் என வாகனத் துறை நிபுணர்கள் கருதுகின்றனர்.