2020 போன்ற நிலைமை ஏற்படும் அபாயம்! இலங்கையில் தீவிரப்படுத்தப்பட வேண்டிய கட்டுப்பாடுகள்
சீனாவில் கோவிட் தொற்றின் பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் இலங்கையிலும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
கோவிட் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கன கட்டுப்பாடுகள் சீனாவில் நீக்கப்பட்டதை அடுத்து அங்கு தொற்று பரவல் வேகம் மீண்டும் அதிகரித்துள்ளது.
இது, சர்வதேச அளவில் பெருந்தொற்று அச்சுறுத்தல் குறித்து நிச்சயமற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் ஆபத்தான புதிய கோவிட் வைரஸ் பரவ ஆரம்பித்தால் மாத்திரமே 2020 போன்ற சூழ்நிலை ஏற்படும் என கருத்து வெளியிட்டுள்ள நிபுணர்கள் அதற்கான சாத்தியக்கூறுகளை நிராகரிக்க மறுத்துள்ளனர்.
கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும்
பலநாடுகளில் கோவிட் தொற்றின் பல்வேறுபட்ட மாதிரிகள் காணப்படுகின்றன ஆகவே புதிய வைரஸ் தோன்றினால் மாத்திரமே பெருந்தொற்று ஆபத்து மீண்டும் ஏற்படும் என ஸ்ரீஜயவர்த்தனபுர பல்கலைகழக பேராசிரியர் நீலிகா மாலவிகே தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், வெவ்வேறு வைரஸ்கள் தோன்றக்கூடிய ஆபத்துள்ளது இதன் காரணமாக நாங்கள் கண்காணிப்பை பலப்படுத்தவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உலகில் தற்போது அதிகளவு கோவிட் நோயாளர்கள் சீனாவிலேயே நாளாந்தம் அடையாளம் காணப்படுகின்றனர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மரபணுவரிசை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளை இலங்கை வலுப்படுத்தவேண்டும் என பேராசிரியர் மாலவிகே தெரிவித்துள்ளார்.
மூன்று வாரத்திற்கு முன்னர் நாங்கள் இறுதியாக மரபணு ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்தோம், தற்போது இதற்கான மாதிரிகள் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இலங்கையில் இன்புளுன்சா பிரச்சினை உள்ளது ஆனால் கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை குறைவு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உலகின் ஏனைய பகுதிகளில் குறைந்தளவு நோயாளர்கள் அடையாளம் காணப்படும் அதேவேளை சீனாவில் அதிகளவு நோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர் இதுவே பிரச்சினை.
புதிய வைரஸ் உருவாவதற்கான மிகவும் பொருத்தமான சூழ்நிலை இதுவென்றும் பேராசிரியர் குறிப்பிட்டார்.