மாகாண சபைத் தேர்தல் தாமதத்துக்கு தமிழ்த் தேசியக் கட்சிகளும் காரணம் : விஜயதாஸ பகிரங்கக் குற்றச்சாட்டு
தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் மாகாண சபைத் தேர்தல் விவகாரத்தில் அதிகளவு குரல் கொடுப்பதை நான் அவதானிக்கவில்லை. மாகாண சபைத் தேர்தல் தாமதத்துக்கு அந்தக் கட்சிகளும் ஒரு காரணமாகும் என்று முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் அரசு மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மாகாண சபைத் தேர்தல் தாமதமடைந்து வருகின்றமை தொடர்பாக ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மாகாண சபைத் தேர்தல்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த அரசுக்குத் தற்போது மக்கள் ஆதரவு தொடர்பான புரிதல் கிடைத்துவிட்டது அதனால்தான் அரச தரப்பினர் மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் இருக்கின்றார்கள்.

தமிழ் மக்களுக்கான பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்துப் பேசுகின்ற அரசு, மறுபுறம் மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் இருக்கின்றது.
மக்களின் ஜனநாயக உரிமையை உறுதிப்படுத்துகின்ற தேர்தலை நடத்தாத அரசு, வடக்குக்குச் சென்று பெரும்பான்மை மக்களை விமர்சிக்கின்றது.
மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்பதை நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம் என்றார்.
தமிழ்த் தேசியக் கட்சிகள்
மேலும் மாகாண சபைத் தேர்தல் குறித்து தமிழ்த் தேசியக் கட்சிகள் அதிகளவு குரல் கொடுப்பதில்லை என்றும் விஜயதாஸ ராஜபக்ச தமது விசனத்தை வெளிப்படுத்தினார்.

எனினும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சுமந்திரன், சாணக்கியன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் மாகாண சபைத் தேர்தல் தொடர்பாகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றார்களே என்று வினவியபோது, அவர் பதிலளிக்கையில், தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் மாகாண சபைத் தேர்தல் விடயத்தில் அதிகளவு குரல் கொடுப்பதை நான் அவதானிக்கவில்லை.
2017ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தல் முறைமையை மாற்றியமைத்து, தேர்தல் தாமதமடைவதற்கு இந்தத் தமிழ்த் தேசியக் கட்சிகள் அன்று முழுமையான ஆதரவை வழங்கியதை நான் இங்கு சுட்டிக்காட்டுகின்றேன்.
தேர்தல் தாமதத்துக்கு அந்தக் கட்சிகளும் ஒரு காரணமாகும் எவ்வாறாயினும் இந்த அரசு மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.