ஜனாதிபதி ரணில் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கக்கூடிய தலைவர்-ரோஹித்த அபேகுணவர்தன (Video)
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதான பிரச்சினைக்கு தீர்வை வழங்கியுள்ளார், இதனால், நாட்டை பொருளாதார ரீதியாக கட்டியெழுப்ப ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அவருக்கு முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கும் எனவும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதி மக்களின் பிரதான பிரச்சினைக்கு தீர்வை வழங்கியுள்ளார்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மக்களுக்கும் ஊடகவியலாளர்களான உங்களுக்கும் இருந்து வந்த பிரதான பிரச்சினை குறிப்பாக எரிபொருள் பிரச்சினை. அந்த பிரச்சினைக்கு ஜனாதிபதி தீர்வை வழங்கியுள்ளார்.
கடந்த காலங்களில் காணப்பட்ட வரிசைகள் இல்லாமல் போயுள்ளதுடன் மக்களுக்கு ஓரளவுக்கு நிவாரணம் கிடைத்துள்ளது. சமையல் எரிவாயு பிரச்சினைக்கும் தீர்வு கிடைத்துள்ளது.
கட்சி என்ற வகையில் நாங்கள் ஜனாதிபதியுடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தினோம். நாட்டை பொருளாதார ரீதியாக கட்டியெழுப்பும் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம்.
ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் தனது கொள்கை திட்டங்களை தெளிவாக முன்வைத்தார். அவர் ஆளும் கட்சி உட்பட அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.
ஆளும் கட்சியாக இருக்கலாம், எதிர்க்கட்சியாக இருக்கலாம் 225 பேரில் 134 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவருக்கு வாக்களித்தனர்.
அவருக்கு வாக்களித்தவர்களுக்கு மட்டுமின்றி, ஏனைய இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாக்களித்தவர்கள் உட்பட அனைவருக்கும் வாருங்கள் ஒன்றாக இணைந்து பணியாற்றுவோம் என கடிதம் மூலம் அழைப்பு விடுத்தார்.
கட்சிகளாக, இன, மதங்களாக பிரிந்து கிடந்த காலத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்

நாடு நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டிய நிலைமைக்கு சென்றுள்ளது. நாம் அணிகளாகவும் குழுக்ககளாகவும் நிறங்களாகவும் கட்சிகளாகவும் இன, மதங்களாகவும் பிரிந்து கிடந்த காலத்தை முடிவுக்கு கொண்டு வந்து, ஓரிடத்தில் இருந்து நாட்டுக்காக முடிவுகளை எடுக்க நேரிடும்.
நாடு எஞ்சியிருந்தால், நாடு பொருளாதார ரீதியாக கட்டியெழுப்பட்டால் மாத்திரமே எமக்கு அரசியலில் ஈடுபட முடியும்.இதனால், நாங்கள் அந்த கடமையை நிறைவேற்றினோம்.
சில கட்சிகள் சர்வக்கட்சி பேச்சுவார்த்தையில் கலந்துக்கொள்கின்றன. வந்து ஜனாதிபதி செயலகத்தில் நேர்மறையாக பேசுகின்றனர். ஆனால், வெளியில் வந்து விமர்சன ரீதியில் கருத்து வெளியிடுவதை நாங்கள் பார்த்திருக்கின்றோம். நாட்டை முன்நோக்கி கொண்டு சென்று பலத்தை ஏற்படுத்தும் பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கின்றது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கடந்த சில தினங்களாக மாநாயக்க தலைவர்களை சந்தித்து, வழிபாட்டுத்தலங்களுக்கு சென்று தமது வேலைத்திட்டங்கள் குறித்து கலந்துரையாடி வருகிறார்.
கோட்டாபய ராஜபக்சவை பொதுஜன பெரமுனவே உருவாக்கியது. ஜனாதிபதி பதவியில் இருந்து அவர் விலகிய போது, கட்சி என்ற வகையில் அன்றைய பிரதமரான ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது என்று கட்சி என்ற ரீதியில் தீர்மானித்தோம்.
கோட்டாபய ராஜபக்சவே ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்தார். இதனால், பிரச்சினைக்கு தீர்வை வழங்கக்கூடிய, சர்வதேசம் ரீதியிலும் உதவிகளை பெற முடிந்த அரசியல் தலைவர் என்ற வகையில், அவருக்கு எமது முழுமையான ஒத்துழைப்பை வழங்கினோம்.
இதனால்,நாடு என்ற வகையில் நாட்டை முன்நோக்கி கொண்டு செல்ல நாங்கள் முயற்சித்து வருகின்றோம். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கி இந்த பயணத்தை முன்னெடுத்துச் செல்வோம் எனவும் ரோஹித்த அபேகுணவர்தன கூறியுள்ளார்.