வீட்டில் இருந்து வீசிய துர்நாற்றம்! சடலமாக மீட்கப்பட்ட கணவன் மனைவி
பொகவந்தலாவை - தெரேசியா தோட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
விசாரணை
குறித்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து அப்பகுதி மக்கள், பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து இந்த சடலங்கள் இன்று(16) மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
38 வயதான சின்னையா விஜயகுமார் மற்றும் 37 வயதான பெருமாள் கௌரி என்ற இருவரே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு வீட்டில் இருந்து சடலங்கள் மீட்கப்படும் போது, அவற்றின் அருகில் நஞ்சு போத்தல் ஒன்று இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனை
சடலமாக மீட்கப்பட்ட பெண் சிறிது காலம் கொழும்பு பகுதியில் கூலி தொழில் செய்து வந்ததாகவும், கொழும்பில் இருந்து தனது வீட்டுக்கு வருகை தந்து நான்கு நாட்கள் கடந்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இருவரின் சடலங்களும் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் மரணம் தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளதாகவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொகவந்தலாவை பொலிஸார் கூறியுள்ளனர்.
