பொருட்களின் விலை ஏற்றம் தொடர்பில் ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
நாட்டில் பொருட்களின் விலை ஏற்றம் தொடர்பில் அரசாங்கம் இதனை விடவும் பொறுப்புடன் செயற்பட வேண்டியது அவசியம் என ஆளும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார (Jagath Kumara) தெரிவித்துள்ளார்.
நாளுக்கு நாள் பொருட்களின் விலைகள் அதிகரித்துச் செல்வதனால் மக்கள் திண்டாடி வருகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொருட்களின் விலை ஏற்றத்தில் தலையீடு செய்யுமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை விடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பொருட்களின் விலைகள் இந்த அடிப்படையில் அதிகரித்தால் எங்கு போய் முடியுமோ என்று தெரியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விலையேற்றத்தை தாங்கிக் கொள்ள முடியாதவர்களுக்கு அரசாங்கம் சலுகை வழங்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
சமுர்த்தி பயனாளிகள் உள்ளிட்ட குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு வரவு செலவுத் திட்டத்தில் நிவாரணம் வழங்காவிட்டால் அவர்கள் பாரிய நெருக்கடியை எதிர்நோக்க நேரிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆளும் கட்சியின் உறுப்பினர் என்றாலும் நாட்டில் பொருட்களின் விலை மக்களினால் தாங்கிக் கொள்ள கூடியதாக இல்லை என அவர் தெரிவித்துள்ளார். கோவிட் காரணமாக மக்களின் எதிர்பார்ப்புக்களை அரசாங்கத்தினால் நிறைவேற்ற முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்படாத காரணத்தினால் மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுவதனை ஜனாதிபதி புரிந்துகொண்டுள்ளமை வரவேற்கப்பட வேண்டியது என அவர் தெரிவித்துள்ளார்.