நெடுஞ்சாலை அமைச்சரிடம் வீதி அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள கோரிக்கை
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் நடைபெற்ற மோசடிகள் மற்றும் ஊழல்கள் குறித்து முறையான விசாரணை நடத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெடுஞ்சாலை அமைச்சில் இன்று(29) நடைபெற்ற கூட்டத்தில் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
கடந்த நல்லாட்சியில் வழங்கப்பட்ட நெடுஞ்சாலை நிர்மாணப்பணிகள் மற்றும் அபிவிருத்தி தொடர்பான பல ஒப்பந்தங்கள் முறையாக நிறைவேற்றப்படவில்லை.
அதிவேக நெடுஞ்சாலை பணிகள் வேண்டுமென்றே தாமதப்படுத்தப்பட்டதா என்பதை ஆராயுமாறு மேற்படி அதிகாரிகள் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைத்தனர்.
கடவத்தை முதல் மீரிகம வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் முதலாவது கட்டம் மற்றும் மீரிகமவில் இருந்து பொதுஹர வரையான இரண்டாவது கட்டம் என்பன தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிடம் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
நல்லாட்சி அரசின் இறுதிக் காலப்பகுதியில் இடைநடுவில் நிறுத்தப்பட்ட வீதி அபிவிருத்தி நிர்மாணப் பணிகள் மற்றும் அபிவிருத்திகளை மக்கள் நலனுக்காக மீண்டும் தொடங்க வேண்டும் என்றும் அவர்கள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.
இந்த விடயம் தொடர்பில் தேவையான தகவல்களை வழங்குமாறும் நல்லாட்சியின் கடைசிக் காலத்தில் நிறுத்தப்பட்ட நிர்மாணப் பணிகளை மக்கள் நலனுக்காக முன்னெடுப்பதாகவும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளிடம் உறுதியளித்தார்.
குறிப்பாக சுபிட்சத்தின் தொலைநோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக, தேவையான இலக்கை நோக்கிப் பயணிக்க அனைத்து அதிகாரிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று சுட்டிக்காட்டிய அமைச்சர், நெடுஞ்சாலை அபிவிருத்தியின் போது தங்கள் தனிப்பட்ட அரசியல் நிலைப்பாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு மக்களுக்குச் சேவை செய்வது மிகவும் முக்கியமாகக் கருதிச் செயற்பட வேண்டும்.
பொதுச் சேவைக்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்றும் வீதி அபிவிருத்தி அதிகாரிகளிடம் அமைச்சர் வலியுறுத்தினார்.

பிரித்தானியாவை நேரடியாக எச்சரிக்கும் அமெரிக்கா - லண்டனில் சூப்பர் தூதரகத்தை கட்டும் சீனா News Lankasri

இந்தியாவின் எதிரி நாடுகளுக்கு புதிய அச்சுறுத்தல் - கடற்படையில் 10 புதிய போர்க்கப்பல்கள் இணைப்பு News Lankasri
