வைத்திய கலாநிதி ஆனந்த விஜேவிக்ரமவிடம் சுகாதார அமைச்சகம் விடுத்துள்ள கோரிக்கை
வைத்திய கலாநிதி, ஆனந்த விஜேவிக்ரம, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் இடைக்கால தொழில்நுட்பக் குழுவில் இருந்து விலக முடிவெடுத்ததை அடுத்து, அவரது முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என இலங்கையின் சுகாதார அமைச்சகம் கோரியுள்ளது.
செய்தியாளர் சந்திப்பில், இன்று உரையாற்றிய, சுகாதார சேவைகளின் துணை பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத், இந்த கோரிக்கை விடயத்தை வெளியிட்டார்.
விஜேவிக்ரம, தனது முடிவை மறுபரிசீலனை செய்வது நல்லது என்று ஹேமந்த தெரிவித்துள்ளார்.
கோவிட் தொற்றுநோய்க்கு எதிரான போரில் தனது ஆதரவையும் ஆலோசனையையும் அளிக்கும் முக்கிய மருத்துவ நிபுணர்களில் விஜேவிக்ரமாவும் ஒருவர் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
பதவி விலகுவதற்கான அவரது முடிவு, கோவிட் தொற்றுக்கு எதிரான முன்னோக்கி செல்லும் பாதையை மோசமாக பாதிக்கும்" என்று ஹேமந்த ஹேரத் வலியுறுத்தினார்.
எனினும், பதவி விலகல் அவரின் தனிப்பட்ட விருப்பம் என்பதால் அவரின் முடிவை மதிப்பதாகவும் வைத்தியர் ஹேமந்த ஹேரத் செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.
முன்னதாக தொற்று நோய் மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் மருத்துவர், ஆனந்த விஜேவிக்ரம, தொழில்நுட்பக் குழுவிலிருந்து விலகியதை அடுத்து, மயக்க மருந்து நிபுணர், வைத்தியர் அசோக குணரத்னவும் அதே தொழில்நுட்பக் குழுவிலிருந்து விலகிக்கொண்டதாக அறிவிக்கப்பட்டது.
கோவிட் தொற்றாளர்களின் வீட்டு பராமரிப்பு, தடுப்பூசி திட்டம் மற்றும் நாட்டில் உள்ள கோவிட் தொற்றுநோய் தொடர்பான பிற விஷயங்கள், சம்பந்தப்பட்ட குழுவால் எடுக்கப்பட வேண்டிய பல முக்கிய முடிவுகள், அதிகாரப்பூர்வமற்ற குழுக்களால் பல சந்தர்ப்பங்களில் எடுக்கப்பட்டமையை அடுத்தே இந்த பதவி விலகல்கள் அறிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
கண்டியில் ஸ்புட்னிக்-வியின் ஒரு அளவு தடுப்பூசி மட்டுமே செலுத்தப்படுவதான தகவல், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 20 முதல் 29 வயதுக்குட்பட்டவர்களுக்கு, குழுவின் அனுமதியில்லாமல் ஃபைசர் தடுப்பூசி வழங்கப்பட எடுக்கப்பட்ட முடிவுகளே, இந்த பதவி விலகல்ளுக்கு காரணங்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
