சுற்றுலாப் பயணிகள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்
உள்ளூர் மற்றும் வெளிநாட்டு உல்லாசப்பயணிகளின் நன்மை கருதித் தீயணைப்பு பிரிவு ஒன்றை பொத்துவில் பிரதேச சபையில் நிறுவுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப்(S. M. M. Muszhaaraff) வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி விவகாரங்கள் அமைச்சின் அமைச்சு சார் ஆலோசனைக் குழுக்கூட்டம், அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தலைமையில் நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் இன்று (02) இடம்பெற்றது.
கூட்டத்தில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் இங்கு உரையாற்றுகையில் அருகம் குடா சுற்றுலாப் பிரதேசத்தின் அவசியத் தேவைகள் குறித்து உரையாற்றினார்.
அருகம்குடா பிரதேசமானது சுற்றுலாத்துறையில் உலகளவில் மிகவும் பிரசித்தமானது. ஆண்டுதோறும் பல்லாயிரக் கணக்கான வெளிநாட்டு சுற்றுலாவிகள் அருகம் குடாவைத் தரிசிக்கின்றனர்.
சுற்றுலாத்துறை மூலம் நாட்டுக்கு ஈட்டப்படும் வருவாயில் அருகம் குடாவின் பங்கும் கணிசமானது. இருப்பினும் சுற்றுப் பிரயாணிகளுக்கான பொது வசதிகளின் குறைபாடு அங்கு இன்னும் நிவர்த்திக்கப்படாமல் தேங்கியுள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் சஞ்சாரம் அடர்த்தியாக இருக்கின்ற போது, ஏதேனும் அனர்த்தங்கள் நிகழ்ந்தால் உடன் நடவடிக்கை எடுப்பதில் அங்கு நிகழும் குறைபாடுகளைக் கருத்திற்கொண்டு மாநகர சபைகளுக்கு வழங்கப்படுகின்ற தீயணைப்பு பிரிவு ஒன்றை பொத்துவில் பிரதேச சபையில் நிறுவித் தருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன் அருகம் குடாவானது மீன்பிடியும், சுற்றுலாத்துறையும் கலந்த இடம். சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் கடற்கரையும், அதன் சுற்றுப் புறமும், உள்ளக வீதிகளும் சுத்தமாகவும் அழகாகவும் பேணப்பட வேண்டியது அவசியம்.
இதனைக் கருத்திற்கொண்டு உள்ளூராட்சி சபைக்குக் கடற்கரை சுத்தப்படுத்தும் இயந்திரங்களை வழங்குமாறு வேண்டிக்கொண்டார்.
அத்துடன் அன்றாடம் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் பயன்படுத்துகின்ற மிகப் பழமையான பொத்துவில் பேருந்து நிலையம் அடிப்படை வசதி, பயணிகள் ஓய்வெடுப்பதற்கான வசதிகளின்றி காணப்படுகிறது. இது மேம்படுத்தப்பட வேண்டும் எனவும் வேண்டுகோள்விடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இவற்றைக் கவனத்தில் எடுத்துக்கொண்ட அமைச்சர் இவை தொடர்பாக அமைச்சினால்
தாபிக்கப்பட்டுள்ள பணிக்குழுவினுள் நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரபையும்
உள்வாங்கி அரும்குடா பிரதேசத்தில் நிலவும் குறைபாடுகளை விரைவாக
நிவர்த்திக்குமாறு பணித்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.