இலங்கை அரசாங்க ஆசிரியர்களின் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை
நாட்டினுடைய அசாதாரண சூழ்நிலையை கருதி கிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சின் தீர்மானத்திற்கமைவான சுற்றறிக்கையினை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என இலங்கை அரசாங்க ஆசிரியர்களின் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை அரசாங்க ஆசிரியர்களின் சங்கத்தின் பிரதான செயலாளர் செஹான் திஸாநாயக்க மற்றும் கிழக்கு மாகாண செயலாளர் கோபாலசிங்கம் சுஜிகரன் ஆகியோர் இணைந்து கிழக்கு மாகாண ஆளுநருக்கு இன்று அனுப்பி வைத்துள்ள கடிதத்திலே இக்கோரிக்கையினை விடுத்துள்ளனர்.
அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
நாட்டில் இன்று ஏற்பட்டிருக்கின்ற அசாதாரண சூழ்நிலையால் அனைத்துப் பிரஜைகளும் தினசரி உணவு மற்றும் போக்குவரத்துப் பிரச்சினைக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
கிழக்கில் வழமைக்கு மாறான வரிசை
இதில் ஆசிரியர்களும் விதிவிலக்கல்ல. இன்றைய எரிபொருள் தட்டுப்பாடானது கிழக்கில் வழமைக்கு மாறாக பாரிய வரிசைகளை ஏற்படுத்தியுள்ளது.
நள்ளிரவில் வரிசையில் நின்றும் மதியம் எரிபொருள் கிடைக்காது ஏமாற்றத்துடன் வீடு சென்று அன்றைய நாளில் வருமானத்தையும் அன்றைய நாளின் பொன்னான நேரத்தையும் இழந்து தவிக்கும் நிலை இன்று உருவாகியுள்ளது.
நிலைமை இவ்வாறு இருக்க ஆசிரியர்களும் இவ்வரிசையில் நின்று எரிபொருள் பெற்று தினமும் பாடசாலை சென்று எவ்வாறு உளமகிழ்வுடன் கற்பிக்க முடியும் என்பது சிந்திக்க வேண்டிய விடயம்.
அத்துடன் ஆசிரியர்களுக்கென எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு மாவட்ட ரீதியாக தனியான எரிபொருள் நிரப்பு நிலையம் மற்றும் குறித்த கால அவகாசம் என்பன இதுவரையில் பெற்றுக்கொடுக்கப்படவில்லை.
விசேட அட்டைகள் வலய ரீதியாக ஒழுங்குமுறை
மேலும் ஆசிரியர்களுக்கென விசேட அட்டைகள் வலய ரீதியாக ஒழுங்குமுறையாக வழங்கப்படவில்லை. ஒருசில இடங்களில் கண்துடைப்புக்காக அட்டைகள் வழங்கப்பட்டன. அவ்வட்டைகளில் உள்ள வலயக்கல்வி பணிப்பாளர்களின் கையெழுத்திற்கு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தகுந்த மதிப்பு கிடைக்கவில்லை என்பதையும் தாங்கள் அறிய வேண்டும்.
மேலும் பொதுப்போக்குவரத்தில் அனைத்து அரச அதிகாரிகளும் பயணிக்கவேண்டுமென கேட்கப்பட்டிருந்தது. பாடசாலைகள் அமைந்துள்ள பிரதேசங்கள் ஏனைய அரச அலுவலகங்களை போன்று அல்ல. பிரதான வீதியிலிருந்து அதிக தூரத்திலுள்ள பாடசாலைகள் அதிகம்.
குறித்த பிரதேசங்களுக்கு பொதுப்போக்குவரத்தும் இன்றுவரை இல்லை. இதனையும் மீறி பொதுபோக்குவரத்தை நாடும் ஆசிரியர்களை சில பேருந்துகள் நிறுத்தி ஏற்றுவதும் இல்லை என்பது அனுபவரீதியான உண்மை.
கல்வியமைச்சு தேசிய ரீதியில் பாடசாலைகள் இயங்கும் முறை
இந்த நிலைமை இவ்வாறு இருக்க கல்வியமைச்சு தேசிய ரீதியில் பாடசாலைகள் இயங்கும் முறைகள் குறித்து நேற்றைய தினம் சுற்றறிக்கை வெளியிட்டிருந்தது.
அதில் குறிப்பிட்டுள்ளமையானது நாட்டின் அனைத்து மாகாணங்களின் நகர்ப்புற பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுகின்றது என்பதுவும் கிராம பாடசாலைகள் மூன்று நாட்களுக்கு நடாத்த முடியும் என்பதுமாகும்.
இது இவ்வாறு இருக்க கிழக்குமாகாணத்தில் ஐந்து நாட்களும் பாடசாலை வழமைபோல் இயங்கும் என தாங்கள் விடுத்த அறிக்கை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோரது மனநிலையை குழப்பும் ஒரு செயலாகும்.
கிழக்குமாகாணத்தைப் பொறுத்தவரை அது கிராமப் பாடசாலையாக இருப்பினும் அதிக ஆசிரியர்கள் தூர இடமிருந்து செல்பவர்களாகவே இருக்கின்றனர்.
எரிபொருள் பிரச்சினை தேசிய ரீதியான பிரச்சினை
அத்துடன், எரிபொருள் பிரச்சினை தேசிய ரீதியான பிரச்சினை. அவ்வாறு இருக்க கிழக்கில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என தாங்கள் நினைப்பதுவும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இலகுவாக பாடசாலை வரமுடியும் என தாங்கள் நினைப்பதுவும் வேடிக்கையான விடயமாக இருக்கின்றது.
மேலும் கல்வியமைச்சின் சுற்றறிக்கையை அமுல்படுத்தாது கிழக்கு மாகாணத்தில் பிரத்தியேகமாக தனிஒரு சுற்றறிக்கையினை பயன்படுத்துவதன் மூலம் ஆசிரியர்களை அரசாங்கத்திற்கு எதிராக கொந்தளிக்கத் தூண்டும் ஒரு செயற்பாடாகவே இது வழிசமைக்கும் என்பது எமது கருத்து. இன்றைய காலகட்டத்தில் அதிகாரிகளும்,ஆசிரியர்களும் சுமுகமான உறவோடு பணியாற்ற வேண்டும்.
ஆசிரியர்களின் நலனே நல்ல மாணவர் சமுதாயத்தை திறம்பட உயர்த்த வழிகோலும். இன்று ஆசிரியர்களுக்கென நாங்கள் விசேட தேவைப்பாடுகளை தங்களிடம் முன்வைக்கவில்லை.
கல்வியமைச்சின் சுற்றறிக்கையினை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் எனவும்
இந்நாட்களில் பாடசாலை செல்ல இயலாதவர்களுக்கு விசேட விடுமுறை வழங்க வேண்டும்
எனவும் விநயமாக கேட்டுக்கொள்கின்றோம் என குறிப்பிட்டுள்ளனர்.